ராமநாதபுரம் நாம் தமிழர் பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு- சீமான் கடும் கண்டனம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் இளங்கோ உள்ளிட்ட 4 பேர் மீது பொய் வழக்கு தொடர்ந்துள்ளதாக போலீசாருக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவி்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளராக இருப்பவர் இளங்கோ. இவர் விற்ற ஒரு நிலம் தனக்கு உரியதென நீண்ட காலமாக அரசியல் செல்வாக்குப் பெற்ற ஒரு பெண் பிரச்சனை செய்து வந்துள்ளார்.
அந்த நிலத்திற்கும் அந்த பெண்ணிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நில அளவீட்டுத் துறையினர் அளந்து கொடுத்து பிரச்சனையை முடித்து விட்டனர்.
இந்த நிலையில் அடியாட்களைக் கொண்டு வந்து இளங்கோவன் உள்ளிட்ட தம்பிகளுடன் அடிதடியில் ஈடுபட்டுள்ளார்.
அந்த நிலம் தொடர்பான உண்மை தெரிந்தும், போலீசார் அந்தப் பெண்ணிடம் பொய் புகாரைப் பெற்றுக் கொண்டு, பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, இளங்கோ உள்ளிட்ட தம்பிமார்களை கைது செய்துள்ளனர்.
அது மட்டுமின்றி, காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட 3 காவல் அதிகாரிகள் ஒன்று சேர்ந்து அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். கொடூரமான இத் தாக்குதலில் இளங்கோவின் கை, கால்களில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற தம்பிமார்களும் பலத்த காயமுற்றுள்ளனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு வழிபட வந்த ராஜபக்சாவின் தங்கை கணவர் நடேசனுக்கு எதிர்ப்புக் காட்டியபோது அவர் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் இளங்கோ இருந்தார், அதற்குப் பழிவாங்கவே இப்படி ஒரு புகாரைப் பெற்றுக்கொண்டு காவல் துறை கைது செய்து துன்புறுத்தியுள்ளது.
இளங்கோவை அடிக்கும் போது நடேசன் விவகாரத்தை சொல்லியே காவல் அதிகாரி மணிவண்ணன் அடித்துள்ளார். தங்கள் மீது செருப்பு வீசியதாக நடேசனோ அல்லது அவரோடு இருந்த எவரும் இளங்கோ மீது புகார் தெரிவிக்கவில்லை.
நடேசனுக்கு எதிர்ப்பு காட்டியதற்காக மத்திய அரசு, தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தின் தாக்கமே இந்தக் கைதும் தாக்குதலும் என்றும் கூறப்படுகிறது.
அது உண்மையாக இருப்பின் ராஜபக்ச தங்கை கணவர் தாக்கப்பட்டதற்கு இத்தனை அக்கறையும், எதிர்ப்பும் காட்டும் மத்திய அரசு, இலங்கை கடற்படையினரால் 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்ட போது அந்த அக்கறையை காட்டாதது ஏன் என்று தமிழக அரசு திருப்பிக் கேட்டிருக்க வேண்டும்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் ஒன்றே முக்கால் லட்சம் தமிழர்கள் இனப் படுகொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த இந்திய மத்திய அரசு, ராஜபக்ச குடும்பத்தினரில் ஒருவர் மீது தமிழ்நாட்டில் செருப்பு வீசப்பட்டதற்கு மட்டும் இவ்வளவு துடிப்பது ஏன் என்றும் தமிழக அரசு கேட்டிருக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி போன்ற ஜனநாயகப் பாதையில் தமிழின உரிமைக்காக குரல் கொடுத்துவரும் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்களை இப்படி உள் வன்மத்துடன் கைது செய்து, கொடூரமாகத் தாக்கியது கண்டனத்திற்குரியதாகும்.
தான் வகிக்கும் பொறுப்பிற்கு முரணாக, காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் மீது தமிழக அரசு உடனடியாக துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த பொய் வழக்கை நாம் தமிழர் கட்சி சட்ட ரீதியாக எதிர்கொள்ளுவதுடன், தாக்குதலுக்கு காரணான அதிகாரிகள் மீது மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்ய உள்ளோம் என்று தெரிவித்துள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications