இன்று முதல் 6 நாட்களுக்கு சங்கரன்கோவிலில் விஜயகாந்த்+பிரேமலதா முழக்கம்!

சங்கரன்கோவில் தொகுதியில் ஏற்கனவே அனைத்துக் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்கட்டத் தலைவர்களில் முதல் ஆளாக விஜயகாந்த் இன்று களம் குதிக்கிறார்.
தனது மனைவியுடன் அவர் தொகுதி முழுவதும் இன்று முதல் 6 நாட்களுக்கு வலம் வந்து தீவிரப் பிரசாரம் செய்யவுள்ளார்.
இன்று சங்கரன்கோவில் வரும் விஜயகாந்த்தும், பிரேமலதாவும் முதலில் சங்கரநயினார் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடவுள்ளனர். அதன் பின்னர் கோவில் வாசலிலிருந்தே பிரசாரத்தைத் தொடங்குகிறார்கள். பின்னர் இருவரும் தனித் தனியாக பிரிந்து போய் ஊர் ஊராகப் போகவுள்ளனர்.
விஜயகாந்த் தனி வேனில் குருவிகுளம் ஒன்றியம் சென்று அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்கிறார். பிரேமலதா தனி வேனில் நாளை சங்கரன்கோவில் டவுன் பகுதியில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார்கள்.
12 மற்றும் 14-ந்தேதி விஜயகாந்த் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திலும், 13, 15ம் தேதி குருவிகுளம் ஒன்றியத்திலும், 16-ந்தேதி சங்கரன்கோவில் ஒன்றியத்திலும் கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்கிறார்.
பிரேமலதா 12-ந்தேதி சங்கரன்கோவில் ஒன்றியம், 13-ந்தேதி மேல நீலிதநல்லூர் ஒன்றியம், 14-ந்தேதி குருவிகுளம் ஒன்றியம், 15-ந்தேதி மீண்டும் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
16ந்தேதி மீண்டும் விஜயகாந்தும், பிரேமலதாவும் சேர்ந்து சங்கரன்கோவில் டவுண் பகுதியில் பிரசாரம் செய்கிறார்கள். மாலை வடக்கு ரதவீதியில் பிரசாரத்தை முடிக்கிறார்கள்.
தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்துக்குமார் ஏற்கனவே தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். யாரைப் பார்த்தாலும் பொத்துப் பொத்தென்று காலில் விழுந்து களேபரமாக அவர் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் 'கேப்டனும்', அவரது மனைவியும் பிரசாரத்தில் குதிப்பதால் தேமுதிகவினர் உற்சாகமடைந்துள்ளனர். விஜயகாந்த் போகும் இடமெல்லாம் பெரும் கூட்டத்தைத் திரட்டிக் காட்ட அவர்கள் தீவிரமாக உள்ளனர்.
முன்னதாக நேற்று மதுரையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார் விஜயகாந்த். அப்போது அவர் பேசுகையில்,
மதுரையில் வழிநெடுக மின்சாரம் இல்லை. மின் பற்றாக்குறைக்கு அ.தி.மு.க.,-தி.மு.க.,வினர் ஒருவர் மீது ஒருவர் பழிபோடுகின்றனர். மக்கள் மீது மாறி, மாறி குதிரை சவாரி செய்கின்றனர்.
மின்சாரம் என்பது சாதாரண விஷயம் அல்ல. பாத்திரத்தில் இருந்தால் தான் அகப்பையில் வரும். திட்டம் போட்டால், தான் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இரு ஆட்சிகளிலும் மின் உற்பத்திக்கு திட்டமிடவில்லை. மக்களை ஏமாற்றுவதில் அ.தி.மு.க., தி.மு.க., வினர் சிறப்பானவர்கள். நான் அரசியல் பேச வேண்டிய இடம் சங்கரன்கோவில். அங்கு, நீங்கள் எதிர்பார்த்ததை விரிவாக பேசுவேன் என்றார்.
பார்க்கலாம், 'கேப்டன்' என்ன பேசப் போகிறார் என்று...!












Click it and Unblock the Notifications