பலம் வாய்ந்த கட்சிகளுக்கு மத்தியில் நிராயுதபாணியாக போட்டியிடுகின்றோம்: வைகோ
மதுரை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் மத்தியில் நிராயுதபாணியாக போட்டியிடுகின்றோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பரவையில் மதிமுக நிர்வாகி இல்ல விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது,
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நமக்கு மிக முக்கியமானது. அதைவிட தொண்டரின் திருமணம் முக்கியம் என்பதால் இங்கு வந்துள்ளேன். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் முழுமையாக இயங்கவில்லை. தேர்வுக்குப் படிக்க முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றனர். தடையில்லா மின்சாரம் கிடைக்க தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐந்து மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க உயிர்மூச்சு உள்ளவரை போராடுவேன். ஆனால் கேரள அரசு அணையை உடைக்க நினைக்கிறது. தமிழகமின்றி கேரளா வாழ முடியாது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலம் போன்ற பலம் வாய்ந்த கட்சிகள் மத்தியில் தொண்டர்களின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ள மதிமுக நிராயுதபாணியாக போட்டியிடுகிறது. தொகுதி மக்கள் எங்கள் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை பொய்த்துப் போகாது என்றார்.












Click it and Unblock the Notifications