சங்கரன்கோவிலில் அடித்துக் கொள்ளும் கட்சியினர்: திண்டாடும் போலீசார்
சங்கரன்கோவில்: சங்ரகன்கோவில் இடைத்தேர்தல் நெருங்க நெருங்க அத்தொகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. பிரச்சாரத்தின் போது கட்சியினரிடையே ஏற்படும் மோதலை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தல் மூலம் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என தேமுதிகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் சங்கரன்கோவில் அண்ணா நகரில் அதிமுக தேர்தல் அலுவலகம் இருக்கும் இடத்திற்கு எதிரே பிரேமலதா பிரச்சாரம் செய்வதை முன்னிட்டு தேமுதிகவினர் கட்சியின் கொள்கை விளக்க பாடலை ஒளிப்பரப்பினர். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த தேமுதிகவினரின் ஸ்பீக்கர் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குள் அடித்து நொருக்கப்பட்டது. ஏ.எஸ்.பி. மகேஷ் தலைமையில் போலீசார் அங்கு வந்து பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர். இது குறித்து இரு கட்சிகளும் போலீசில் புகார் செய்தனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள வாகைகுளத்தில் திருப்பரங்குன்றம் நகர திமுக செயலாளர் கிருஷ்ணபாண்டி, ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் வளர்மதிக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கிருஷ்ணபாண்டி, கார்த்திகேயன் ஆகியோர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக சின்னகோவிலான்குளம் போலீசில் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட அதி்முகவினர் புகார் செய்தனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்யப்பட்டது. பல இடங்களில் திமுக, மதிமுக, தேமுதிக தொண்டர்களுடன் அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதால் சங்கரன்கோவில் தொகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications