எவ்வளவோ செய்திருக்கிறோம், இன்னும் செய்வோம்: சாதனைகளைக் கூறி வாக்கு கேட்ட ஜெ.
சங்கரன்கோவில்: தமிழகத்தில் நிலவி வரும் மின்பற்றாக்குறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று சங்கரன்கோவில் தொகுதியில் 10 இடங்களில் சூறாவளிப் பிரச்சாரம் செய்தார்.
திருவேங்கடம் பஜாரில் அவர் பேசியபோது கூறியதாவது,
கடந்த திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டாலும், மெத்தனப்போக்காலும் தான் தற்போது தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை சீர்செய்ய பல்வேறு புதிய மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். வரும் ஜூன் மாதம் 1,950 மெகாவாட் மின்சாரமும், அக்டோபரில் 600 மெகாவாட் மின்சாரமும் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைக்கும். எனவே, வரும் ஜூன் மாதத்தில் இருந்து தமிழகத்தில் நிலவி வரும் மின்பற்றாக்குறை படிப்படியாக குறையும். வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க முயன்றாலும் மின்தொடர் நெருக்கடியால் வாங்க முடியவில்லை.
கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இது போன்று மேலும் பல மின் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறோம். இந்த விவகாரத்தில் நானே தலையிட்டு கவனித்து வருவதால் மின் பற்றாக்குறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளைக் கண்டித்தும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்று செய்திகள் வருகின்றன. தமிழர்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு உள்ள அக்கறை இவ்வளவு தான்.
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. காவல்துறை பொதுமக்களின் நண்பனாக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 1,190 நில அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ.724 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சட்டசபை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். விலையில்லா அரிசி திட்டம், முதியோருக்கான உதவித்தொகை உயர்வு, தாலிக்கு 4 கிராம் தங்கம் உள்ளிட்ட திருமண உதவித்தொகை, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், உழவர் பாதுகாப்புத் திட்டம், குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி சேவை, இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இது தவிர பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, 10 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, இலவச சைக்கிள் போன்றவற்றை அதிமுக அரசு வழங்கி வருகிறது. மேலும் மாணவர்களுக்கு ஒரே வண்ணத்தில் புத்தகப் பைகள், காலணிகள், சீருடைகள், பென்சில் உள்ளிட்டவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.
தமிழகத்தில் வெண்மைப் புரட்சி ஏற்படுத்தவும், ஏழை மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் இலவச ஆடு, மாடுகள் வழங்கி வருகிறோம். 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடசென்னை முதலாவது யூனிட் விரிவாக்கத் திட்டம் - 600 மெகாவாட், வள்ளூர் கூட்டுமுயற்சி திட்டம் -1,500 மெகாவாட், வள்ளூர் கூட்டுமுயற்சி திட்டம் - 2,500 மெகாவாட், 3வது யூனிட் - 500 மெகாவாட், மேட்டூர் 3ம் நிலைத் திட்டம் - 600 மெகாவாட், வடசென்னை யூனிட் - 2,600 மெகாவாட் ஆகிய திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications