பதவி விலகவேண்டுமா? எழுத்துப்பூர்வமாக எழுதித் தர மமதா பானர்ஜிக்கு தினேஷ் திவேதி நிபந்தனை
டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து தினேஷ் திவேதியை நீக்க வேண்டும் என்பதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகவும் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக தினேஷ் திவேதியை தொடர்பு கொண்ட திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி உடனே பதவி விலகுமாறு அவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் தினேஷ் திவேதியோ புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். தம்மை பதவி விலகுமாறு மமதா பானர்ஜி எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் நிச்சயம் தாம் பதவி விலகுவதாக கல்யாண் பானர்ஜியிடம் உறுதியளித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய தினேஷ் திவேதி, என்னை பதவி விலகச் சொன்னால் அதனை முறைப்படி சொல்ல வேண்டும். அனேகமாக ஓரிரு நாட்களில் நான் பதவி விலகிவிடுவேன் என்று கூறியுள்ளார்.
முன்னதாக தினேஷ் திவேதியை ஓரிருவாரங்களுக்கு தொடர்ந்து அமைச்சராக நீடிக்க விடுமாறு காங்கிரஸ் கட்சி, மமதாவை சமாதானப்படுத்த முயற்சித்துப் பார்த்தது. ஆனால் இந்த சமாதான முயற்சிகள் பலனளிக்கவில்லை. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பிரதமர் மன்மோகன்சிங் உரைக்குப் பின்னர் திவேதியை மாற்றலாம் என்றும் காங்கிரஸ் பேசிப் பார்த்தது.
ஆனாலும் பலனில்லை.
இதனிடையே தினேஷ் திவேதி விவகாரத்தில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவது என்று திரிணாமுல் காங்கிரஸ் முடிவெடுத்தால் மத்திய அரசை ஆதரிக்க சமாஜ்வாதி கட்சி தயாராக இருப்பதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications