சங்கரன்கோவிலில் நாளை வாக்கு பதிவு : பாதுகாப்பு தீவிரம்
சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிறுக்கிழமை நடைபெற உள்ளதை ஒட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொகுதிக்கு உட்பட்ட ஆட்களைத் தவிர வெளியூர் நபர்கள் தங்கியிருந்தால் அவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு லாட்ஜ் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை 18ம்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்காக 242 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஞாயிறு காலை 8 மணிக்கு வாக்கு பதிவு நடைபெற உள்ளதை ஒட்டி வெள்ளிக்கிழமை மாலையுடன் பிச்சாரம் ஓய்ந்தது.
திமுக வேட்பாளர் ஜவஹர் சூரிய குமார் சங்கரன்கோவில் அசம்பெளி லாட்ஜ் அருகிலேயும், அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி சுவாமி சன்னதியிலும், மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் முப்புடாதி அம்மன் கோவில் அருகே பொது கூட்டத்திலும் , தேமுதிக வேட்பாளர் முத்துகுமார் வடக்கு ரத வீதி பொது கூட்டத்திலும் மாலை 5 மணிக்கு பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
டாஸ்மாக் லீவ்
இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்ததை அடுத்து வெள்ளிக்கிழமை மாலையோடு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடி சில் வைக்கப்பட்டது. 18ம் தேதி இரவு வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொகுதியில் தங்கியிருந்து தேர்தல் பணிசெய்த வெளியூர் நபர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற போலீசார் உத்தரவிட்டுள்ளனர். வேறு காரணங்களுக்காக தங்கியிருப்பவர்கள் நோ அப்ஜெக்சன் சான்றிதழ் பெறவேண்டும் எனவும் லாட்ஜ், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
பாதுகாப்பு தீவிரம்
வாக்கு பதிவை முன்னிட்டு சங்கரன்கோவில் தொகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் வாக்கு பதிவு முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 6 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்று சங்கரன்கோவில் வந்தனர். இவர்கள் தொகுதி முழுவதும் பாதுகாப்பு பணிக்காக பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர். இதில் சங்கரன்கோவிலுக்கு 2 கம்பெனிகளும், மேலநீலிதநல்லூர், குருவிகுளம் தலா 1 கம்பெனியும் அனுப்பப்பட்டது. இவர்களுடன் தென்மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications