சென்னை, டெல்லி ரயில் நிலையங்களில் தலையில்லா உடல்கள்: காதல் ஜோடியா?
சென்னை: டெல்லியி்ல் இருந்து சென்னை வந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த இரும்பு பெட்டியில் தலையில்லா ஆணின் உடல் இருந்தது. அந்த உடலைக் கைப்பற்றிய சென்ட்ரல் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் இருந்து புறப்பட்ட கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை ரயில் நிலையத்திற்கு வந்தது. நேற்று காலை 7.15 மணியளவில் ரயிலை சுத்தம் செய்ய சென்ற பணியாளர்கள் 2.5 x 2.5 x 5 அடி இரும்பு பெட்டி கிடந்ததைப் பார்த்தனர். உடனே அவர்கள் இது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சென்ட்ரல் ரயில்வே நிலைய போலீசார் அங்கு வந்து பெட்டியைத் திறந்து பார்த்தனர். அப்போது அதில் கருப்பு நிற பாலிதின் பையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் தலையில்லா உடல் இருந்தது.
கொல்லப்பட்ட நபரின் தோள்களில் காயம் உள்ளது. அது அவரது தலையை வெட்டியபோது ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த உடலை ரயில் டெல்லியில் இருந்து கிளம்பியபோதே வைத்திருக்க வேண்டும். அந்த நபரின் அடையாளம் தெரியவில்லை. இது குறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கவுள்ளோம் என்று துணை கமிஷனர் பொன்ராமு தெரிவித்தார்.
இதே போன்று தெற்கு டெல்லியின் சாராய் ரோஹில்லாவில் உள்ள இந்தர்லோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு பையில் தலையில்லா பெண்ணின் உடல் இருந்தது. ஒரே நாளில் டெல்லி மற்றும் சென்னை ரயில் நிலையங்களில் தலையில்லா ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை அவர்கள் காதல் ஜோடிகளாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications