இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி திருமா உண்ணாவிரதம்

மார்ச் 21-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
"ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க வல்லரசு முன்மொழிந்துள்ள வரைவுத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென தமிழக மக்களும் உலகத் தமிழினமும் ஒட்டு மொத்தமாகக் குரல் எழுப்பி வருகின்றன.
ஆனாலும், இந்திய அரசு அத்தீர்மானத்தை ஆதரிக்கும் என்பதற்கான அறிகுறி எதுவும் தென் படவில்லை.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ஒருங் கிணைந்து வற்புறுத்தியும்கூட இந்திய அரசின் நிலைப் பாடு தெளிவுப்படுத்தப்படவில்லை.
மாறாக, அத்தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வாய்ப்பில்லை என்கிற வகையில் வெளியுறவுத்துறை அமைச்சரின் அறிக்கை அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்திய அரசு அத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் வரும் 21-ந்தேதி (புதன்கிழமை) அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஒருநாள் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
அத்துடன் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து 23-ந்தேதி நடத்தவுள்ள பொது வேலை நிறுத்தத்தில் விடுதலைச் சிறுத்தைகள் முழுமையாகப் பங்கேற்கும்.
விடுதலைச் சிறுத்தைகளின் உண்ணாவிரத போராட்டத்திலும் பொது வேலை நிறுத்தத்திலும் உழைக்கும் தமிழக மக்கள் பெருவாரியாகப் பங்கேற்று நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications