கரூரில் சிறப்பாசிரியர் நியமனத்தில் மெகா ஊழல்-பணம் கொடுத்தால் பதவி?
கரூர்: கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனத்தில், அதிகாரிகள் மறைமுகமாக ஊழலில் ஈடுபட்டு தகுதியில்லாதவர்களுக்கு பணி நியமனம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, நலத்துறை பள்ளி ஆகியவற்றில் கணினி, ஒவியம், உடற்கல்வி, இசை, தையல் உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக இருந்தன.
இப்பணியிடங்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க கடந்த ஆண்டு நவம்பரில் அரசாணை வெளியிட்டது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுவினர், கடந்த 2 மாதங்களாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு, கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதி உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, இனசுழற்சி முறை உட்பட அனைத்து விதிமுறைகளும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
பணி நியமன வழங்கப்பட்டு ஒரு வாரமாகியும், இதுவரை இணையதளத்தில் பட்டியல் வெளியிடப்பட இல்லை. முதன்மை கல்வி அலுவலகத்திலும் வெளியிடப்படவில்லை. எந்த தகுதியும் இல்லாதவர்களுக்கு ஆளும்கட்சி ஆதரவோடு முறைகேடாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே கரூர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட பணி ஆணை குறித்து திருச்சி மாவட்ட விஜிலென்ஸ் துறை விசாரிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இதனை வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தமிழக அரசுக்கும் மனு அனுப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications