கட்காரி அறிவித்த ராஜ்யசபா வேட்பாளர்கள்: அத்வானி, ஜேட்லி, சுஷ்மா கடும் எதிர்ப்பு
டெல்லி: பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின்கட்காரியை 2-வது முறையாக தலைவராக்க அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு வருகிறது. ஆனால் கட்காரி அறிவித்திருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர் பட்டியலோ ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.அலுவாலியா
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எப்பொழுதுமே உரத்துப் பேசிவருபவர் எஸ்.எஸ். அலுவாலியா. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவரான இவரது குரல் ஒவ்வொரு நாள் நாடாளுமன்ற நடவடிக்கையிலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அலுவாலியாவுக்கு தற்போது சீட் மறுக்கப்பட்டுவிட்டது.
அலுவாலியாவுக்கு பதில் பாரதிய ஜனதாவுக்கு தொடர்பே இல்லாத சுயேட்சையாக ஜார்க்கண்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ள லண்டன் தொழிலதிபர் அனுஸுமன் மிஸ்ராவை ஆதரிக்கப் போவதாக கட்காரி அறிவித்துள்ளது கட்சியினரை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இதேபோல் மராட்டிய மாநிலத்தில் ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியத் திட்ட ஊழலில் அடிபட்ட அஜய் சன்சேத்தி என்ற நாக்பூர் தொழிலதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் சிக்கிய ஃபக்கான் சிங் குலசதே ஆகியோருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
சண்டிகரைச் சேர்ந்த வழக்கறிஞரான பூபேந்தர் யாதவ் கட்சியினருக்கே பரிட்சயமில்லாதவர். அவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கட்காரியின் இந்த அறிவிப்பால் அதிருப்தியடைந்துள்ள மூத்த தலைவர்கள் அத்வானி, சுஸ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் பாஜகவின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications