ரயில் கட்டண உயர்வு குறித்து மம்தா பானர்ஜிக்கு முன்பே தெரியும்?

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தை கி.மீக்கு 2 பைசா உயர்த்தினார் தினேஷ் திரிவேதி. உடனே, ஏழைகளுக்கு எதிராக தினேஷ் திரிவேதி செயல்பட்டுவிட்டார், ஐயோ.. ஏழைகள் கஷ்டப்படுவதை என்னால் பார்க்கவே முடியாது என்று கூறிக் கொண்டு தனது கட்சியைச் சேர்ந்த திரிவேதியை பதவி விலக வைத்தார் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி.
உடனடியாக, முகுல் ராயை நேற்று புதிய ரயில்வே அமைச்சராகவும் பதவியேற்க வைத்துவிட்டார்.
இந் நிலையில் பதவியைப் பறிகொடுத்த தினேஷ் திரிவேதி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பட்ஜெட் விவரங்களை நான் மம்தாவுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது உண்மை தான். ஆனால், அவருக்கு மிக நெருக்கமான அதிகாரியுடன் கட்டண உயர்வு விஷயம் குறித்துப் பேசினேன். அவர் மூலமாக மம்தாவுக்கு நிச்சயமாக கட்டண உயர்வு குறித்து முன்பே தெரிய வந்திருக்கும்.
அதே போல என்னை பதவி நீக்கியதற்கு கட்டண உயர்வு காரணமே இல்லை. முன்பே என்னை நீக்க முடிவு செய்துவிட்டார்கள். கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதும் அதைக் காரணம் காட்டி தூக்கிவிட்டார்கள்.
நான் ரயில்வேயை ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு அதிகாரியைப் போல நடத்தினேன். என்னைப் பொறுத்தவரை நான் யாருக்கும் தலைவணங்கவும் மாட்டேன். அது கூட நான் தூக்கப்பட ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.
இப்போது ரயில்வே அமைச்சராகியுள்ள முகுல் ராய், மம்தாவுக்கு தலையாட்டும் பொம்மையாக இருப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications