இடிந்தகரையில் குவிக்கப்பட்டுள்ள போலீஸாரை வெளியேற்ற வேண்டும்- வைகோ
சென்னை: இடிந்தகரை கிராமத்தில் அறவழியில் மக்கள் போராடி வரும் நிலையில், அங்கு பத்தாயிரம் போலீஸாரைக் குவிக்க வேண்டிய அவசியம் என்ன. மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் அங்கிருந்து போலீஸாரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கூடங்குளத்தில் மக்கள் அறவழியில் அணுமின் நிலையத்தை தொடங்க கூடாது என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். எந்த விதமான வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் அவர்கள் போராடி வரும் போது, அங்கே 10 ஆயிரம் போலீசார்களை குவிக்க வேண்டிய அவசியம் என்ன?
மக்களின் நியாயமான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில், கிறிஸ்தவ மிஷனரிகள் மீது குற்றம் சாட்டியும், அயல்நாட்டு பணம் போராட்டக்காரர்களுக்கு வருவதாக அபாண்டமான பழி சுமத்தியும், மத்திய அரசு நச்சு பிரசாரம் செய்து வந்தது.
போராட்டக்காரர்களை மிரட்டுவதற்காக, 200-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகளை தமிழக காவல்துறை பதிவு செய்து உள்ளது.
தற்போது, போராட்ட குழுவில் உதயகுமார் உள்ளிட்டோர் தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம் என மிரட்டல் செய்திகளை, காவல்துறை கசிய விட்டு உள்ளது. உதயகுமாரை கைது செய்ய போவதாகவும், அவரை ஒப்படைக்கும் படி பொது மக்களிடம் கேட்டுள்ளதாகவும், காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். இது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.
அறவழி போராட்டத்தை ஒடுக்க முயலும் மிரட்டல் வேலை. தர்மயுத்தம் நடத்தி வருகின்ற அப்பகுதி வாழ் மக்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவுமானால், விபரீதமான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறேன்.
இடிந்தகரை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ள காவல்துறை, அங்கிருந்து வெளியேற வேண்டும். போராட்டக்குழுவின் உதயக்குமார், புஷ்பராயன் உள்ளிட்டோர், சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தினரின் அறப்போராட்டத்தை ஆதரித்தும், காவல்துறையின் அடக்கு முறையை எதிர்த்தும் இந்த சோதனையான நேரத்தில் மனித உரிமை ஆர்வலர்களும் அணு உலை எதிர்ப்பாளர்களும் குரல் கொடுக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications