டெல்லியில் எதியூரப்பா, சதானந்த கௌடா முகாம்: பதவிக்கு இருவரும் போட்டா போட்டி!

சுரங்க ஊழல் முறைகேட்டில் முதல்வர் பத்வியை இழந்தார் எதியூரப்பா. சில காலம் அமைதியாக இருந்த அவர் கடந்த மாதம் தமக்கு மீண்டும் முதல்வர் பதவியோ அல்லது மாநில பாஜக தலைவர் பதவியோ வழங்கப்பட வேண்டும் என்றார். ஆனால் அவர் மீதான சுரங்க ஊழல் வழக்கில் நிரபராதி என நிரூபிக்கப்பட்ட பிறகு அவருக்கு உரிய பதவி வழங்கப்படும் என்று பாஜக தலைவர் நிதின் கட்காரி உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் எதியூரப்பா மீதான சுரங்க முறைகேடு வழக்கில் முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து மீண்டும் பிரச்சனை வெடித்தது. தனக்கு முதல்வர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என்று கூறி அவர் 48 மணி நேர கெடு விதித்தார். இந்நிலையில் நேற்று அவர் பாஜக தலைவர்களை சந்தித்து பேச டெல்லிக்கு சென்றார். நேற்றிரவு அவர் பாஜக தலைவர் நிதின் கட்காரி மற்றும் மூத்த தலைவர் அருண் ஜேட்லி ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் எதியூரப்பாவைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சாதனந்த கௌடாவும் நேற்றிவு டெல்லிக்கு சென்றார்.
அவர் கர்நாடக மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவுடன் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங், கட்காரி ஆகியோரை இன்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.
இதையடுத்து எதியூரப்பா கட்காரியையும் அருண் ஜேட்லியையும் சந்தித்துப் பேசினார். அத்வானி அவரை சந்திக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில், எதியூரப்பா எல்லை மீறி செயல்படுவதால் அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என சதானந்த கெளடாவும் ஈஸ்வரப்பாவும் கட்சித் தலைமையிடம் கூறியதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால், இதை கெளடா மறுத்துள்ளார்.
இதற்கிடையே நிருபர்களிடம் பேசிய கெளடா, முதல்வர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது என கட்காரி உறுதியாக என்னிடம் தெரிவித்துவிட்டார். எதியூரப்பா டெல்லிக்கு வந்திருப்பதே எனக்குத் தெரியாது என்றார்.
ஆனால், எதியூரப்பா நிருபர்களிடம் பேசுகையில், சில தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளேன், இன்னும் சிலரை சந்தித்துப் பேசுவேன். முதல்வர் பதவி குறித்து நான் ஏதும் கூற முடியாது. அதை கட்சித் தலைமை தான் முடிவு செய்யும் என்றார்.
இதற்கிடையே உடுப்பி-சி்க்மளூர் இடைத்தேர்தலில் எதியூரப்பா பிரச்சாரம் செய்யாததால் பாஜக தோல்வியடைந்தது. அதனால் அக்கட்சி எதியூரப்பாவின் பலத்தையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. அதே சமயம் தனது முதல்வர் பதவியை இழக்க கௌடா தயாராக இல்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, கட்காரியை சந்தித்து பேசியுள்ளார்.
முன்னதாக எதியூரப்பா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 70 பேருடன் பெங்களூரில் உள்ள ரிசார்ட் ஒன்றி்ல் தங்கினார். மாநில பட்ஜெட்டை புறக்கணிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து கட்சி மேலிடத்தின் கோரிக்கையை ஏற்று அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்டார். எதியூரப்பா பதவி கேட்டு கெடு விதிப்பதும், கட்சித் தலைவர்கள் அவரை சமாதானப்படுத்துவதும் வழக்கமாகிவிட்டது.
ஆனால் இம்முறை முதல்வர் பதவி கிடைக்காமல் எதியூரப்பா ஓயமாட்டார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications