தெலுங்கானா பகுதியை சேர்ந்த 5 காங்கிரஸ் எம்.பிக்கள் கட்சியிலிருந்து விலக முடிவு
ஹைதராபாத்: தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் 5 பேர் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியிலிருந்தே வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணையக் கூடும் என்றும் தெலுங்கானா காங்கிரஸ் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கக் கூடும் என்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெபல்லி எம்.பி. விவேகானந்த், கரீம்நகர் எம்.பி. பொன்னம் பிரபாகர், நகர்கர்னூல் எம்.பி. மண்டா ஜெகன்னாதன், நலகொண்டா எம்.பி. குட்ட சுகேந்தர் ரெட்டி மற்றும் போங்கிர் எம்.பி. ராஜகோபால் ரெட்டி ஆகிய 5 பேரும் காங்கிரஸிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா தனிமாநிலத்தை காங்கிரஸ் கட்சி உருவாக்கத் தவறியதால் தாங்கள் வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக 5 பேரும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைமைக்கு இன்னும் சிறிதுகாலம் கெடு விதித்துவிட்டு வெளியேறுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் பொன்னம் பிரபாகர் எம்பியோ, கெடுவெல்லாம் விதிக்கப் போவதில்லை.. காங்கிரஸிலிருந்து வெளியேறுவது நிச்சயம் என்று பகிரங்கமாகவே எச்சரித்திருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இருந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியுடன் ஒரு குரூப் வெளியேறிவிட்ட நிலையில் பலவீனப்பட்டு உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா பிரதேசத்தில் ஒட்டுமொத்தமாகவே காங்கிரஸ் கட்சி காலியாகிவிட்டால் ஆந்திராவில் காங்கிரஸ் காணாமல்போய்விடும் என்றும் சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் புலம்பவும் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications