திவாகரனுக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சசிகலாவின் சகோதரர் திவாகரன். இவர் மீது குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் ரிஷியூரில் வீட்டை இடித்ததாக கஸ்தூரி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் திவாகரன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மற்றொருவரும் இணைய இருப்பதாக தகவல் கூறப்பட்டது. எனவே மனு மீதான விசாரணை 29-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
மிரட்டல் வழக்கு
மிரட்டி பணம் வாங்கியதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கிலும் திவாகரன் கைது செய்யப்பட்டார். திவாகரன் நிர்வகிக்கும் செங்கமல தாயார் மகளிர் கல்லூரியில் யாழினி என்ற மாணவி படித்தார். அவர் விவேகானந்தன் என்பவரை காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். கல்லூரியில் உள்ள விடுதி பணத்துடன் யாழினி வெளியேறியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் கல்லூரியின் பெயரை கெடுத்ததற்காக யாழினியின் உறவினர் சரவணன் என்பவரை 9.9.11 அன்று மிரட்டி, ஒரு லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக, திவாகரன் மீது எடையூர் போலீசில் சரவணன் கடந்த 8.2.12 அன்று புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் திவாகரன் மீது அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டு அன்றே அவர் கைது செய்யப்பட்டார். திவாகரனுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ரகுநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் மீதும் எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நிபந்தனை ஜாமீன்
இந்த வழக்கிலும் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கேட்டு ஐகோர்ட்டில் திவாகரன் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில் ஆஜராகிய அரசு குற்றவியல் தலைமை வக்கீல் ஐ.சுப்பிரமணியன், அரசு வக்கீல் கோவிந்தராஜ் ஆகியோர் திவாகரனுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
48 நாட்கள்
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், திவாகரனுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், "இந்த வழக்கில் போலீஸ் காவல் விசாரணை முடிந்துவிட்டது. விசாரணை இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 48 நாட்கள் திவாகரன் ஜெயிலில் இருந்துவிட்டார்.
எனவே திருத்துறைப்பூண்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் செலுத்திவிட்டு, திவாகரன் ஜாமீன் பெறலாம்.
சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் திவாகரன் 4 வாரங்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். தேவைப்படும்போதும் போலீஸ் முன்னிலையில் அவர் ஆஜராக வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications