ராணுவத்தினர் போல தமிழக போலீசாருக்கும் குறைந்த விலையில் பொருள் வாங்க சிறப்பு அங்காடிகள்

ரூ. 1 கோடி மானியத்தில் ஆவடி சிறப்பு காவல் படை பயிற்சி மைய வளாகம், திருச்சி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணி வளாகம், மதுரை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆறாம் அணி வளாகம் ஆகிய இடங்களில் போலீசாருக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து கொண்டே வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
அதன் பிறகு அவர் பேசியதாவது,
தமிழக மக்கள் அச்சமின்றி வாழ காவல்துறையினர் இரவு, பகல் பார்க்காமல் பணிபுரிகின்றனர். தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்ற வேண்டும் என்ற என்னுடைய முயற்சிக்கு காவல்துறையினர் உறுதுணையாக உள்ளனர்.
குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் சிறப்பு அங்காடிகள் சலுகை இதுவரை ராணுவத்தினருக்கு மட்டுமே இருந்தது. தற்போது முதன்முறையாக தமிழகத்தில் காவலதுறையினர் குறைந்த விலையில் அனைத்துப் பொருட்களும் வாங்கும் அங்காடிகளை இன்று திறந்து வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ராணுவத்தினர் அயல்நாட்டு எதிரிகளிடம் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காக்கிறார்கள்.
மாநில காவல்துறையினர் சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றுகிறார்கள். அதிமுக அரசு காவல்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. தற்பொழுது பணிபுரியும் காவல் துறையினரும், அவர்களது குடும்பத்தினரும் மற்றும் ஒய்வுபெற்ற காவல் துறையினரும், அவர்களது குடும்பத்தினரும், இறந்து போன காவல்துறையினரின் குடும்பத்தினரும் இந்த சிறப்பு அங்காடிகள் மூலம் பயனடைவர். இந்த அங்காடிகளை நல்ல முறையில் பயன்படுத்தி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றார்.
1 கோடியே 1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் 26 மாவட்ட ஆயுதப் படை வளாகங்கள் மற்றும் 10 தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகங்கள் ஆகியவற்றில் காவல்துறையினருக்கான மருத்துவ சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
அதன் பிறகு அவர் பேசியதாவது,
காவல்துறையினரும், அவர்களது குடும்பத்தினரும் சிகிச்சை பெற ஏற்கனவே மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் தமிழ்நாடு சிறப்பு காவல்படை மற்றும் ஆயுதப்படை பிரிவினரும், அவர்களது குடும்பத்தாரும் மருத்துவ சிகிச்சை பெற வெகுதூரம் செல்ல வேண்டியிருந்ததால் சிரமப்பட்டனர். எனவே, அந்த சிரமத்தைப் போக்கவே தற்போது நீங்கள் பணிபுரியும் தலைமையிடங்களிலேயே மருத்துவ சேவை மையங்களையும், மருந்தகங்களையும் இன்று திறந்து வைத்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
காவல்துறையினரும், அவர்களது குடும்பத்தாரும் இந்த மருத்துவ சேவை மையங்களையும், மருந்தகங்களையும் நல்ல முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications