Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக பட்ஜெட்: சொன்னது என்ன? என்ன?, நடந்தது என்ன? என்ன?- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: விலைவாசியை குறைக்கவோ, வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ தமிழக பட்ஜெட்டில் எதுவும் இல்லை. மாறாக உண்மைகளை மறைத்து திசை திருப்பும் வகையில் வெறும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாக தமிழக அரசின்பட்ஜெட் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும் திமுக ஆட்சியில் பட்ஜெட் தயாரித்த நிதித் துறை செயலாளர் சண்முகம்தான் இந்த பட்ஜெட்டையும் தயாரித்துள்ளார். கடந்த காலத்தில் நிதி நிலைமை சரியாக இல்லாமல் இருந்திருந்தால் சண்முகத்தை அதிமுக அரசு தொடர்ந்து பொறுப்பில் வைத்திருக்குமா? என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2012-13-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் 3 மணி நேரம் படித்துள்ளார். எப்போதும் இல்லாத அளவுக்கு 91 பக்கங்கள். இது தவிர தனிப் பத்தி ஒன்றையும் அவர் படித்திருக்கிறார். இந்த பட்ஜெட்டையும், கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கைகளையும் படித்துவிட்டு ஒரு சில ஐயப்பாடுகளையும், கருத்துக்களையும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

திமுக ஆட்சிப் பொறுப்பிலே இருந்த 2006-2011 ஆண்டுகளில் புதிய வரிகளையே விதிக்கவில்லை. ஆனால் அதிமுக அரசு 2011 மே திங்களில் பதவிக்கு வந்தவுடனேயே மக்களுக்கு வரி போட்டது.

கடந்த திமுக ஆட்சியின் கடைசி நிதியாண்டு பட்ஜெட்டில், அரசின் மொத்த வருவாய் வரவு ரூ. 79,431 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் எந்தவிதமான புது வரிகளையும் விதிக்காமலேயே வருவாய் வரவு ரூ. 40,700 கோடியாக இருந்தது. திமுக ஆட்சியில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லையே தவிர, அரசின் வருவாய் உயராமல் இல்லை. ஏற்கெனவே உள்ள வரிகளை ஒழுங்காக வசூல் செய்தாலே வருவாய் உயரும்.

2011-12ம் ஆண்டில் தமிழகத்தின் வரி வருவாய் 19.24 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 2010-11ல் வரி வருவாய் 21.99 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது. இதன் மூலம் திமுக ஆட்சியிலும் வரி வருவாய் அதிகமாக வந்துளளதை அறியலாம்.

2011-12 திருத்தப்பட்ட பட்ஜெட்டின்படி வணிக வரிகளின் வரவு ரூ. 37,196 கோடி. இது 2010-11ம் ஆண்டைவிட 20.50 சதவீதம் அதிக வளர்ச்சி என 4.8.2011ல் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இதன் மூலம் திமுக ஆட்சியிலும் வணிக வரி முறையாக வசூல் செய்யப்பட்டதை அறியலாம்.

2012-13ம் நிதியாண்டில் உபரி வருவாய் ரூ. 2,376.07 கோடியாக இருந்தாலும், நிதிப் பற்றாக்குறை ரூ. 19,832.13 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.87 சதவீதமாகும். தி.மு.க. ஆட்சியிலும் இதே அளவுக்கும், இதைவிட குறைந்த அளவிற்கும் தான் நிதிப் பற்றாக்குறை இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

""2011 மே மாதம் அதிமுக அரசு பொறுப்பேற்றபோது மாநிலத்தின் நிதி நிலைமை மேசமாக இருந்தது. மொத்த வருவாய் பற்றாக்குறை 2009-10ல் ரூ. 3,531 கோடியாகவும், 2010-11ல் ரூ. 2,729 கோடியாகவும் இருந்தது'' என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

பற்றாக்குறை உள்ளது என்பதால் நிதிநிலை மோசம் என்ற அர்த்தமல்ல. இப்போதைய அதிமுக அரசின் பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை ரூ. 19,832.13 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் இந்த அளவுக்கு நிதிப் பற்றாக்குறை இருந்ததா எனத் தெரியவில்லை. எனவே நிதிநிலை தற்போது ஜெயலலிதா ஆட்சியிலே மோசமாக உள்ளது என்று சொல்லிவிடலாமா?.

ரூ. 12,873.81 கோடிக்கு மட்டுமே நடப்பாண்டில் கடன் பெற்றிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அது மாத்திரமல்ல, வரும் ஆண்டில் வாங்கப் போகும் கடன் அளவை ரூ.18,387.47 கோடி அளவிலேயே கட்டுப்படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் தான் ஆட்சிக்கு வந்தவுடன் 2006ம் ஆண்டுக்கு முன்பு ஐந்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்த போது அதிமுக அரசு 50 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கியதையே மறந்துவிட்டு, திமுக அரசு கடன் சுமையை வைத்துவிட்டுப் போனதாகத் திரும்பத் திரும்பக் குற்றஞ் சாட்டினார்கள்.

கடந்த கால அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக மோசமான நிதி நிர்வாகம், பொறுப்பற்ற செலவுகள், மாநிலத்தின் நிதி நிலையில் கடும் சீரழிவு, பெரிய சுமை என்றெல்லாம் வார்த்தைகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

நிதித்துறையில் கடந்த கால அரசு எந்தத் தவறும் செய்துவிடவில்லை என்பதற்கு ஒரே உதாரணம் கூற வேண்டுமேயானால்- திமுக ஆட்சியில் பட்ஜெட் தயாரித்த நிதித் துறை செயலாளர் சண்முகம்தான் இந்த பட்ஜெட்டையும் தயாரித்துள்ளார். இதன் மூலம் முந்தைய அரசை பின் தொடர முயற்சிக்கிறீர்கள். கடந்த காலத்தில் நிதிப் பிரச்னை சரியாக இல்லாமல் இருந்திருந்தால் சண்முகத்தை அதிமுக அரசு தொடர்ந்து பொறுப்பில் வைத்திருக்குமா?.

இந்த பட்ஜெட்டை தயாரிக்க உதவிய சண்முகம் ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கு நன்றி என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதிலிருந்தே கடந்தகால அரசை பின் தொடர முயலுகிறீர்கள் என்றுதான் பொருள்.

கடந்த ஆண்டு அன்பழகன் 2011-2012ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அவையிலே வைத்தபோதே, "2011-2012ம் நிதியாண்டின் இறுதியில் வருவாய்ப் பற்றாக்குறை நீங்கி, ரூ.439 கோடி அளவிற்கு வருவாய் உபரி இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது'' என்று கூறியிருப்பதை மறைத்துவிட்டு, வருவாய் உபரியாக ரூ.173.87 கோடி என்று இந்த ஆட்சியிலேதான் வருவாய் உபரி என்பதைப்போல பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக ஆட்சி வாங்கிய கடன் சுமையை குறைக்க வேண்டியுள்ளது என்கிறார்கள். ஆட்சிக்கு வந்த 9 மாதங்களில் எத்தனை ஆயிரம் கோடி கடனை அடைத்திருக்கிறார்கள்? நடப்பாண்டில் ரூ. 12,873.81 கோடி கடன் வாங்கியிருப்பதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் ரூ. 1,500 கோடிக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் வரிகளை விதிக்காத திமுக ஆட்சி எங்கே? ஆண்டுக்காண்டு வரிகளை விதிக்கும் அதிமுக அரசு எங்கே? என்பதை தமிழக மக்கள் ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

2011-12 பட்ஜெட்டில் அரசாலும், பல்வேறு கூட்டு முயற்சியாலும் ரூ. 22,800 கோடி முதலீட்டில் 3,800 மெகாவாட் மின் உற்பத்திக் கூடுதலாக கிடைக்கும் என்றார்கள். அது என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் "அரசாலும், பல்வேறு கூட்டு முயற்சிகளாலும் மொத்தம் ரூ.22,800 கோடி முதலீட்டில் 3,800 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும்'' என்று சொன்னார்களே? என்னவாயிற்று? ஆண்டுக்கு 20,000 தெரு விளக்குகள் வீதம் 1000 கிராமங்களில் ரூ.248 கோடி செலவில் சூரிய சக்தியில் எரியும் ஒரு லட்சம் தெரு விளக்குகளை அமைக்கும் ஒரு மகத்தான திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும் என்று சொன்னார்களே? என்னவாயிற்று?.

ஒரு லட்சம் தெரு விளக்குகளில் எத்தனை விளக்குகளை அமைத்திருக்கிறார்கள்? 2011-2012ம் ஆண்டில் 200 கிராமங்களில் 20 ஆயிரம் தெரு விளக்குகள் சூரிய சக்தியை பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று சொன்னார்களே, எத்தனை கிராமங்களில் அமைத்திருக்கிறார்கள்?

சூரிய மின் வசதி பெறும் 60,000 பசுமை வீடுகளை ரூ.1,080 கோடி மதிப்பீட்டில் அதிமுக அரசு 2011-2012ம் ஆண்டில் கட்டித் தரும் என்று பட்ஜெட்டில் அறிவித்தார்கள். 60,000 வீடுகளில் எத்தனை வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள்?.

சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் பூங்கா ஒன்றை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் அமைக்கும் என்று சொன்னார்களே, எங்கே அந்த பூங்கா உள்ளது என்று பதிலுரையில் சொல்வார்களா?.

எந்த வழியைப் பின்பற்றி மின்வெட்டை அரசு தீர்க்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புக்கு தமிழக பட்ஜெட்டில் விடை எங்கும் இல்லை.

2011,2012ம் ஆண்டில், தகுதியுள்ள மாணவர்களுக்கு 9.12 லட்சம் லேப்டாப்கள் வழங்குவதற்கு 912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று படித்தார்கள். ஆனால் 3 லட்சம் லேப்டாப்கள் வாங்க உத்தரவு கொடுக்கப்பட்டதாகவும், அதுவும் வந்து சேரவில்லை என்கிறார்கள். என்ன உண்மை?.

திமுக ஆட்சியில் இருந்த போதெல்லாம் மத்திய அரசு எவ்வெப்போதெல்லாம் அகவிலைப்படியினை உயர்த்துகிறதோ, அதே நாளிலிருந்து தமிழக அரசும் தனது அலுவலர்களுக்கு அகவிலைப் படியினை உயர்த்தி வழங்கிடும். ஆனால் தற்போது மத்திய அரசு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள போதிலும், தமிழக அரசு அதுபற்றி மூச்சே விடவில்லை.

மொத்தத்தில் அதிமுக அரசின் 2012-2013ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விலைவாசியைக் குறைப்பதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ- வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களிடம் வாங்கும் சக்தியைப் பெருக்குவதற்கோ- எவ்வித திட்டமும் இலலை.

கடன் சுமை குறைக்கப்படவில்லை; ஆனால் வரிச் சுமை புதியதாக ஏற்றப்பட்டிருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை. வெறும் வார்த்தை ஜாலங்களே நிறைந்திருக்கின்றன. இவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடப் பயன்படுமா? சொன்னது என்ன? என்ன?, நடந்தது என்ன? என்ன? என்று கருணாநிதி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+