இந்தியப் பாதுகாப்பு 'ஓட்டையை' அம்பலப்படுத்திய ராணுவ தளபதிக்கு கட்டாய விடுப்பு?

ராணுவ விவகாரம் குறித்து ராணுவ தளபதி வி.கே. சிங் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனால் அந்த கடிதத்தின் விவரம் நேற்று ஒரு நாளிதழில் வெளியானது மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் தலைதூக்கியது. அரசியல் கட்சிகள் ராணுவ தளபதியை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தின.
அரசியல் கட்சிகள் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தினாலும் மத்திய அரசு அவ்வாறு செய்யாது என்று தெரிகிறது. ஆனால் அவரை கட்டாயவிடுப்பில் செல்லுமாறு மத்திய அரசு வலியுறுத்தலாம் என்று தெரிகிறது.
கடித விவகாரம் வெளியானது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் விசாரித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர் அருண் ஜேட்லி அந்தோணியிடம் கூறுகையில், ரகசியமாக வைக்க வேண்டிய விவகாரங்கள் எல்லாம் ஊடகங்களுக்கு கிடைக்கின்றன. இது போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்றார்.
ராணுவ தளபதியை பதவி நீக்கம் செய்தால் அது தவறான உதாரணமாகிவிடும். அப்படி செய்தால் பிற நாடுகள் நம்மைப் பற்றி என்ன நினைக்கும் என்று ஒரு அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
மற்றொரு அமைச்சர் கூறுகையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் மூலமாக அல்லாமல் தானே பிரதமருக்கு நேரடியாக கடிதம் எழுதியதன் மூலம் ராணுவ தளபதி ஒழுங்கு விதிமுறைகளை மீறியுள்ளார். ஏற்கனவே வயது விவகாரத்தில் இது போன்று தான் நடந்து கொண்டார் என்றார்.
வி.கே. சிங்கின் பதவிக்காலம் வரும் மே மாதம் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications