திருச்சி முழுவதும் பரபரப்பு, பதட்டம்- போலீஸார் பெருமளவில் குவிப்பு

கே.என்.நேருவின் சொந்தத் தம்பி ராமஜெயம். இவர் இன்று காலை, தில்லை நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து வழக்கம் போல வாக்கிங் சென்றார். வழக்கமாக அவருடன் 3 அல்லது நான்கு பேர் உடன் செல்வார்களாம். ஆனால் இன்று யாரும் உடன் செல்லவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு யாரோ சிலர் ராமஜெயத்தை கடத்திச் சென்று விட்டனர்.
இந்த நிலையில் இவரது உடல் கல்லணை அருகே திருவளர்ச்சோலை என்ற இடத்தில் புதர்ப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. கை, கால்களை கட்டி வெட்டிப் படுகொலை செய்து உடலை அங்கே போட்டுள்ளனர் கொலையாளிகள்.
மீட்கப்பட்ட ராமஜெயத்தின் உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
ராமஜெயம் கொலையால் அவரது உறவினர்களும், குடும்பத்தினரும், திமுகவினரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவமனையில் நூற்றுக்கணக்கில் உறவினர்களும், திமுகவினரும் குவிந்துள்ளனர். சிலர் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகரின் பல பகுதிகளில் குறிப்பாக தில்லை நகர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் பதட்டம் காணப்படுவதால் அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் வகையில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையிலும் போலீஸார் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications