2 நகை கொள்ளையர்கள் கைது- ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் மீட்பு
சிவகங்கை: சிவகங்கையில் உள்ள கடைக்கடையில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்த இருப்பு பெட்டியை திருடி சென்ற 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பாதுகாப்பாக வைத்திருந்த கொள்ளையனின் தாயாரும் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது நகை கடையில் இருந்து கடந்த 9ம் தேதி 6.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 3.5 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டியை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், 4 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். சம்பவம் நடந்த நகை கடைக்கு எதிரே இருந்த வங்கியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் சம்பவத்தன்று அப்பகுதியில் நடமாடியவர்கள் குறித்த விவரத்தை போலீசார் திரட்டினர்.
மேலும் நகை கடையில் இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அதனை தமிழகம் முழுவதும் உள்ள குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது நெல்லை மாவட்டம் குப்பனாபுரத்தை சேர்ந்த ராஜா(32) என்பவர் போலீசாரிடம் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தேனி மாவட்டம் குமணன்தொழுவனதாய்புரத்தை சேர்ந்த மனோகரன்(28) உடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார்.
சுரேஷ்குமாரின் நகை கடையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் இருந்த பெட்டியை காரில் தூக்கி சென்றுள்ளனர். அதன்பிறகு அருகில் உள்ள கண்மாய் கரையில் அதன் லாக்கரை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை எடுத்து கொண்டு பெட்டியை கண்மாய்க்குள் ஏறிவிட்டு தப்பியோடி உள்ளனர்.
அதன்பிறகு கொள்ளையடித்த நகைகளை மனோகரனின் தாயார் ஜெயலட்சுமியிடம் கொடுத்து வைத்தனர். இதேபோல தஞ்சை மாவட்டம் பூண்டியில் உள்ள ஒரு அடகு கடையில் இருந்து 2.5 கிலோ வெள்ளிக் கொலுசுகளை இருவரும் சேர்ந்து திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக ராஜா, மனோகரன், ஜெயலட்சுமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6.5 கிலோ தங்க நகைகள், 6 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரொக்கம் ரூ.25,000, தப்பி செல்ல பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடியாகும்.












Click it and Unblock the Notifications