பெங்களூரின் பழமையான ஏரியைக் காக்க எஸ்.எம்.எஸ். அனுப்புங்களேன்..
பெங்களூர் ஜே.பி. நகரில் 13 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது இந்த புட்டனஹள்ளி ஏரி. இதை பாதுகாக்க புட்டனஹள்ளி ஏரி பாதுகாப்பு அறக்கட்டளை (பிஎன்எல்ஐடி) அமைக்கப்பட்டது. எழுத்தாளர் உஷா ராஜகோபாலன், ஆர்த்தி, பிரசன்னா வைனதியா, பொறியாளர் ஓ.பி.ராமசாமி ஆகியோர் இணைந்து இந்த அறக்கட்டளையை அமைத்தனர்.
2011ம் ஆண்டு இந்த ஏரியை பராமரிக்கும் பொறுப்பை பெங்களூர் மாநகராட்சியே இந்த அமைப்பிடம் ஒப்படைத்தது. அன்று முதல் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இந்த ஏரியைக் காக்க இந்த அமைப்பு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த அறக்கட்டளை ஒரு தன்னார்வ, லாப நோக்கில்லாத அமைப்பாகும். இதில் இடம் பெற்றுள்ளோர் அனைவருமே பொது நல ஆர்வம் கொண்ட பொது மக்கள் தான். ஏரியைச் சுற்றி பல்வேறு குடும்பங்கள் தாங்களாகவே பல வகையான மரங்களை நட்டு, பராமரித்தும் வருகின்றனர். இந்த மரங்களையும் எரியையும் தேடி ஏராளமான பறவைகளும் வர ஆரம்பித்துவிட்டன.
ஏரி, அதை சார்ந்த விலங்குகள், பறவைகள், மீன்கள், தாவரங்கள் என இயற்கை நமக்குத் தந்துள்ள அழகிய சூழல் அழிந்துவிடாமல் காக்க, மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க என்னென்ன செய்ய முடியுமோ அந்த முயற்சிகளில் எல்லாம் இந்த அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்குத் தேவைப்படும் நிதியை நன்கொடைகள் மூலமாகவே இந்த அறக்கட்டளை பெற்று வருகிறது. ஆனால், இதை ஒரு பறவைகள் சரணாயலம் போல மாற்றிட இந்த அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அதற்கு இந்த நன்கொடைகள் போதுமானதாக இல்லை.
இந்நிலையில் இது போன்ற மக்கள் முயற்சிகளை ஆதரித்து நிதியுதவி செய்ய மகிந்திரா நிறுவனம் முன் வந்துள்ளது. சிறந்த திட்டத்தைத் தேர்ந்தெடுத்து மகிந்திரா நிறுவனம் உதவி செய்யவுள்ளது.
இந்தப் போட்டியில் புட்டனஹள்ளி ஏரி பாதுகாப்பு அறக்கட்டளையும் பங்கெடுத்துள்ளது. இதில் வெல்லும் திட்டத்துக்கு ரூ. 40 லட்சமும் அடுத்தடுத்த இடங்களைப் பெறும் 3 திட்டங்களுக்கு தலா ரூ. 20 லட்சமும் நிதியுதவியாக வழங்கப்படும்.
மகிந்திரா நிறுவனத்தின் இந்த உதவி புட்டனஹள்ளி ஏரிக்குக் கிடைத்தால், அதை மேலும் வளப்படுத்துவதும், பெங்களூர் போன்ற கட்டிட நெரிசல்களுக்கு மத்தியில் ஒரு இயற்கையான சரணாயலத்தையும் ஏற்படுத்துவது சாத்தியமாகும்.
பறவைகளுக்கு மட்டுமா சரணாலயம் தேவை.. நகர்ப்புற 'கான்ங்கிரீட் காடுகளில்' வசிக்கும் மனிதர்களுக்கும் தானே?.
இந்தப் போட்டியில் புட்டனஹள்ளி ஏரி வெற்றி பெற நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு ஒட்டு போடுவது தான். உங்களது ஒவ்வொரு ஓட்டும் மிக மிக அவசியம். இதில் ஓட்டு போட நீங்கள் செய்ய வேண்டியது இது தான்: உங்கள் செல்போன் மூலம் MHRISE P07 என்று டைப் செய்து 54646 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவது தான்.