சிவகங்கையில் ஆயுதங்களுடன் எஸ்.ஐ. ஏட்டை துரத்திய ரவுடி கும்பல்: மக்கள் பீதி
சிவகங்கை: சிவகங்கை அருகே ரவுடிகளிடம் இருந்து உயிருக்கு பயந்து எஸ்.ஐ., ஏட்டு ஆகியோர் ஓட்டம் எடுத்த சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி டாஸ்மாக் கடைக்கு 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்து பணம் கொடுக்காமல் மதுபானம் கேட்டு விற்பனையாளர் வெங்கடேசனிடம் தகராறு செய்தது. இது குறித்து கடை ஊழியர்கள் போன் மூலம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பயிற்சி எஸ்.ஐ. பாரதிராஜா, ஏட்டு காசிவிஸ்வநாதன் ஆகியோர் வந்து ரவுடி கும்பலை விரட்டினர். அப்போது அந்த கும்பல் தங்களிடம் இருந்த கத்தி, அரிவாளை எடுத்துக் கொண்டு பயிற்சி எஸ்.ஐ. மற்றும் ஏட்டு ஆகியோரை விரட்டியது.
அதில் அருகில் உள்ள கடைக்குள் புகுந்து ஏட்டு தப்பித்தார். இருப்பினும் அவரை நோக்கி ரவுடிகள் சோடா பாட்டில்களை வீசினர். அடுத்து பயிற்சி எஸ்.ஐ.பாரதிராஜா மின்னல் வேகத்தில் அவர்களிடம் இருந்து தப்பியோடினார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். பின்பு டாஸ்மாக் விற்பனையாளர் வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் மாரநாடு கருப்பையா, ஆவரங்காடு மைக்கேல் முனியாண்டி, கருப்புராஜா, ஆட்டோ டிரைவர் கருப்பையா ஆகியோர் மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் கருப்பையா, மைக்கேல் முனியாண்டி, கருப்புராஜா ஆகிய 3 பேரும் டாஸ்மாக் கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு ஜாமீனில் வெளி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications