இளைஞர்களுக்கெல்லாம் முன் உதாரணமாக வாழ்ந்தவர் முத்துக்குமரன்: தா. பாண்டியன் புகழாரம்
புதுக்கோட்டை: கார் விபத்தில் பலியான புதுக்கோட்டை தொகுதி சிபிஐ எம்.எல்.ஏ. முத்துக்குமரன் இளைஞர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ முத்துக்குமரன் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தா. பாண்டியன் கூறுகையில்,
கணவரை இழந்து தவிக்கும் அந்த சகோதரிக்கும், சின்னஞ்சிறு வயதிலேயே தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும் எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. சிறுவயதில் இருந்து துடிப்போடு செயல்பட்டு வந்த முத்துக்குமரன் இளைஞர்களுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக திகழந்தார். அப்பேர்பட்ட முத்துக்குமரனை சாலை விபத்து பலிவாங்கியது.
இயற்கையை நம்மால் மாற்ற முடியாது. மாநிலம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு கட்சி கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தோழர்கள் முத்துக்குமரனுக்கு அஞ்சலி செலுத்த வந்து குவிந்துகொண்டிருக்கின்றனர்.
இனியாவது கட்சிக்காரர்கள் பாதுகாப்பாக பயணிக்க முத்துக்குமரனின் இழப்பு நமக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications