கண்டக்டர் வேலைக்கு லஞ்சம் கேட்டதால் நேருவை மிரட்டியதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம்!
சங்கரன்கோவில்: திமுக ஆட்சியின்போது கண்டக்டர் வேலைக்கு சேர்க்க லஞ்சம் கேட்டதால் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் சிக்கிய நான்கு பேரும் கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேருவின் தம்பி ராஜஜெயம் கடந்த 29ம் தேதி மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தனிப்படைகள் அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நேருவின் தில்லை நகர் அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு மர்ம ஆசாமி அடுத்த குறி நேருவுக்குதான் என கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார். இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஸ்குமார் யாதவிடம் புகார் செய்யப்பட்டது.
தில்லை நகர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர். நேரு அலுவலகத்திற்கு எந்த தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தனியார் செல்போன் நிறுவனம் மூலம் கந்தசாமி என்பவர் பேசியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு இதில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.
அவரை பிடிப்பதற்காக திருச்சி தனிப்படை போலீசார் நேற்றுகாலை சங்கரன்கோவில் வந்தனர். குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன் பெரும்புத்தூர் கிராமத்துக்கு சென்று வேலு மகன் சண்முகவேல், களக்காடு அருகே உள்ள எஸ்என் பள்ளிவாசலை சேர்ந்த மாசானம் மகன் பன்னீர்செல்வம், ராஜபாளையத்தை சேர்நத ரமேஷ் உள்பட 4 பேரை சைபர் கிரைம் போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் கடந்த திமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் வேலையில் சேர லஞ்சம் கேட்டதால் ஆத்திரமடைந்து இருந்தோம். இது தான் சரியான சமயம் என்று கருதி போனில் மிரட்டல் விடுத்தோம் என்று அவர்கள் கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த திமுக ஆட்சியில் கே.என்.நேரு போக்குவரத்து அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications