தெருவில் அமர்ந்தாவது மக்கள் பணியாற்றுவேன்: மு.க. ஸ்டாலின் பேச்சு
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட குடியிருப்போர் நல சங்கத்தினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி பெரவள்ளூரில் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட மு.க. ஸ்டாலின் ஊனமுற்றோருக்கு 3 சக்கர வாகனங்கள் மற்றும் ஏழைகளுக்கு பல்வேறு நடத்திட்ட உதவிகளை வழங்கினார். பொது மக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அதன் பிறகு அவர் பேசியதாவது,
என் மீது நம்பிக்கை வைத்து என்னைத் தேர்ந்தெடுத்த கொளத்தூர் மக்களின் எதிர்பார்ப்புகள் வீண் போகாது. சாலை வசதி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மக்கள் அளித்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தேவைப்பட்டால் நானே அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிடுவேன்.
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றுவோம்.
கொளத்தூர் சட்டசபை உறுப்பினருக்கான தனி அலுவலகம் இங்கு தான் உள்ளது. பொது மக்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை நிவர்த்தி செய்ய நான் பாடுபடுவதால் பொறாமைப்பட்டு இந்த அலுவலகத்தை காலி செய்யுமாறு கூறினர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன். அப்படி வராவிட்டாலும் கவலையில்லை, சாலையில் அமர்ந்தாவது மக்கள் பணியாற்றுவேன் என்றார்.