ஏற்றிய மின்கட்டணத்தில் கொஞ்சம் குறைப்பு... - மக்களைக் 'கூல் பண்ண' ஜெ டெக்னிக்!

கடந்த மாதம் 30ம் தேதி மின் கட்டண உயர்வை தமிழக மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. ஏப்ரல் 1ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.
100 யூனிட் வரை மின்சாரம் உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.1.10 பைசா, 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ. 1.80 பைசா, 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.3.50 பைசா, 500 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்துபவர்களுக்கு 5 ரூபாய் 75 பைசாவாக உயர்த்தப்பட்டது.
இது முன்பிருந்ததை விட 37 சதவீதம் குறைவாகும். மேலும் 300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு மாதம்தோறும் கணிசமான தொகையை கூடுதலாக வசூலிக்கவும் உத்தரவு பிறப்பிருந்திருந்தது மின்வாரியம். இது வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு பெரும் சுமையாக மாறியது.
இந்த மின் கட்டண உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பொது மக்களிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. திமுக, தேமுதிக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டங்களும் அறிவித்தன. இதனைத்தொடர்ந்து இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மின் கட்டணத்தை குறைத்து சட்டப் பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார்.
சட்டசபையில் இது தொடர்பாக அவை விதி 110ன் கீழ் அவர் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இரு மாதங்களில் 100 யூனிட்டுகள் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 10 பைசாவில் இருந்து 1 ரூபாயாக குறைக்கப்படும்.
இரு மாதங்களில் 200 யூனிட்டுகள் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 80 பைசாவில் இருந்து 1 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும்.
இரு மாதங்களில் 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம், முதல் 200 யூனிட்டுகளுக்கு 3 ரூபாயிலிருந்து 2 ரூபாய் என்றும்; 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான கட்டணம் 3 ரூபாய் 50 பைசாவிலிருந்து 3 ரூபாய் என்றும் குறைக்கப்படும்.
இதனால், மின்சார வாரியத்திற்கு ரூ.740 கோடி வரை செலவாகும். இதனை அரசு மானியமாக வழங்கும் என்றும் அவர் அறிவித்தார்.
எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு:
முன்னதாக இன்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாமக உறுப்பினர்கள் மின் கட்டண உயர்வு பிரச்சனை பற்றி பேச அனுமதி கேட்டனர். சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதி மறுத்தார்.
முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் பேச அனுமதி கேட்டுள்ளார். எனவே அவர் பேசிய பிறகு உங்கள் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
இதை ஏற்காமல் 5 கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையை விட்டு வெளியே வந்த அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
வெளிநடப்பு திமுக சட்டமன்றத் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,
தமிழக அரசு மின் கட்டணத்தை மிக அதிகமான அளவு உயர்த்தியுள்ளது. 37 சதவீதம் உயர்த்தியதாக கூறப்பட்டாலும் 65 முதல் 70 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இது ஏழை- எளிய மக்களை மிகவும் பாதிக்கும்.
இதுகுறித்து சட்டசபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து பேச அனுமதி கேட்டோம். ஆனால் அதற்குள் முதல்வர் 110-வது விதியின் கீழ் பேசுவார் என்று சபாநாயகர் அறிவித்தார். எங்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications