2 மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கு: இத்தாலிய கப்பலை விடுவிக்க கேரள ஹைகோர்ட் மறுப்பு
திருவனந்தபுரம்: தமிழக மீனவர் உள்பட 2 மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இத்தாலிய நாட்டு கப்பலை விடுவிக்கும் உத்தரவை கேரள உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் உள்பட 2 மீனவர்களை அந்த வழியாக வந்த இத்தாலிய நாட்டு சரக்கு கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் அந்த கப்பல் பறி்முதல் செய்யப்பட்டு கொச்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கப்பலை விடுவிக்கும்படி கேரள உயர் நீதிமன்றத்தில் கப்பல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி கோபகுமார் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக ரூ.3 கோடிக்கு வங்கி உத்திரவாதம் வழங்குமாறும், எப்பொழுது விசாரணைக்கு அழைத்தாலும் கப்பல் கேப்டனும், ஊழியர்களும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கப்பலை விடுவிக்கும்படி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், கப்பலை விடுவிக்கும் உத்தரவுக்கு கடந்த 2ம்தேதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. கப்பலை விடுவிக்கும் அதிகாரம் கொல்லம் மாவட்ட நீதிமன்றத்திற்கு தான் உண்டு என்று கருத்து தெரிவித்துள்ளது. இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கப்பலை விடுவிக்க நீதிபதி கோபகுமார் பிறப்பித்த உத்தரவை பெஞ்ச் ரத்து செய்தது.
தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கப்பலை பறி்முதல் செய்ய உத்தரவிட்ட கொல்லம் மாவட்ட நீதிமன்றத்துக்கு தான் கப்பலை விடுவிக்கும் அதிகாரமும் உள்ளது. எனவே கப்பலை விடுவிக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் தான் கப்பல் நிறுவனம் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு ஒரு வாரம அவகாசம் அளிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications