பாடத் திட்டமே தெரியாமல் வகுப்பு நடத்திய ஆசிரியர்கள்: தேர்வு மையத்தில் விழித்த மாணவிகள்
நெல்லை: 10ம் வகுப்பு தேர்வு வரை சமஸ்கிருத பாடத்திற்கான பாடத்திட்டம் தெரியாமலேயே நெல்லை பள்ளியில் பாடம் நடத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த தேர்வில் வினாத்தாளைப் பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
10ம் வகுப்பு தேர்வுகள் நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது. நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதேபோல் சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்து படித்த மாணவ, மாணவிகளுக்கும் நேற்று முதல் தாள் தேர்வு நடந்தது. பாளையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் சமஸ்கிருத வினாத்தாளை படித்துப் பார்த்த மாணவிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த பள்ளியில் 3 மாணவிகள் சமஸ்கிருத தேர்வு எழுதினர்.
பாடத்திட்டத்திற்கு தொடர்பில்லாத வினாக்கள் இடம் பெற்றிருப்பதை பார்த்த அவர்கள் செய்வதறியாது அழுதுவிட்டனர். வேறு வழியில்லாது ஏதோ பெயருக்கு தேர்வு எழுதிய மாணவிகள் இது குறித்த விபரத்தை தங்கள் பெற்றோருக்கு தெரிவித்தனர். பெற்றோர் பள்ளியை தொடர்பு கொண்டு விசாரித்த போதுதான் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தெரியாமல் வேறொரு பாடத்திட்டத்தை நடத்தியது தெரிய வந்தது.
இது தொடர்பாக கல்வித் துறையிடம் தெரிவித்துள்ளதாக கூறி பள்ளி நிர்வாகம் சமாளித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் 9ம் தேதி நடக்கும் 2ம் தாள் தேர்வுக்காக தங்கள் குழந்தைகளை தயார்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications