பிரதிபா பாட்டீல் 23-வது வெளிநாட்டு பயணமாக ஆப்பிரிக்கா செல்கிறார்

நாட்டின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய பிரதிபா பாட்டீல் இதுவரை 12 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு மொத்தம் 22 நாடுகளுக்கு சென்றிருக்கிறார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குடியரசுத் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு மொத்தம் ரூ205 கோடி செலவிடப்பட்டது என அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.
பிரேசில், மெக்சிகோ, சிலி, பூட்டான், வியட்நாம், இந்தோனேசியா, ஸ்பெயின், போலந்து, ரசியா, தஜிகிஸ்தான், இங்கிலாந்து, சைப்ரஸ், சீனா, லாவோஸ், கம்போடியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிரியா, மொரிஷீயஸ், தென்கொரியா, மங்கோலியா, சுவிட்சர்லாந்து மற்ரும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு பிரதிபா சென்று திரும்பியுள்ளார். மொத்தம் 79 நாட்கள் அவர் வெளிநாட்டில் தங்கியிருக்கிறார்.
குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாம் 7 பயணங்கள் மூலமாக 17 நாடுகளுக்கும் கே.ஆர். நாராயணன் 6 பயணங்கள் மூலமாக 10 நாடுகளுக்கும் சங்கர் தயாள் சர்மா தமது பதவி காலத்தில் 4 பயணங்கள் மூலமாக 16 நாடுகளுக்கும் சென்றிருந்தனர்.
குடியரசுத் தலைவராக இருந்த ஜைல்சிங் தான் குறைவான பயணம் மேற்கொண்டவர் என்று அவரது ஊடக ஆலோசர் தல்ரோஜன் சிங் தெரிவித்துள்ளார்.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், ஏப்ரல் 27 அல்லது 28ம் தேதி ஆப்பிரிக்க பயணம் மேற்கொள்ளக் கூடும். மே 8ம் தேதி நாடு திரும்புவார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜூலை மாதத்துடன் பிரதிபா பாட்டீலின் பதவிக் காலம் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications