ஸ்டாலின் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து-புகார் கொடுத்தவரே வாபஸ் பெற்றார்

Subscribe to Oneindia Tamil

Stalin
சென்னை: தி.மு.க. பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு எதிராக சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் தொடர்ந்த நில அபகரிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

வழக்கு என்ன?

சென்னை தேனாம்பேட்டை, சித்தரஞ்சன் சாலையைச் சேர்ந்த என். சேஷாத்ரிகுமார் என்பவர் 29.11.2011-ல் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், தொழிலதிபர் பி. வேணுகோபால் ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிராக நில அபகரிப்புப் புகார் அளித்தார்.

சித்தரஞ்சன் சாலையில் இருந்த தமது இடத்தை உதயநிதி ஸ்டாலினுக்கு விற்க வேண்டும் என்று ராஜாசங்கர், சுப்பா ரெட்டி, ஸ்ரீனிவாஸ் ஆகிய 3 பேர் தம்மை மிரட்டியதாகவும், உதயநிதியின் பினாமியான வேணுகோபால் ரெட்டியிடம் தமது நிலத்தைக் கட்டாயப்படுத்தி விற்கச் செய்ததாகவும், இவையனைத்தும் மு.க. ஸ்டாலின் தூண்டுதலின் பேரிலேயே நடந்தன என்றும் புகாரில் கூறியிருந்தார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இதைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேணுகோபால் ரெட்டி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சித்தரஞ்சன் சாலையில் சேஷாத்ரிகுமார், அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமாக இருந்த இரண்டரை கிரவுண்ட் நிலத்தை வாங்கினேன். இதற்காக ரூ.5 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரத்தை வங்கி வரைவோலையாக சேஷாத்ரிகுமாருக்கு வழங்கினேன்.

இது தொடர்பான பத்திரப் பதிவு 19.8.2010-ல் நடைபெற்றது. என்னிடம் வாங்கிய பணத்தைப் பயன்படுத்தி சென்னை பிஷப் கார்டன் பகுதியில் இரண்டு சொத்துகளை சேஷாத்ரிகுமார் வாங்கினார்.

இவ்வளவும் முடிந்து ஒரு ஆண்டு மூன்று மாதங்களுக்குப் பின் அவரது நிலத்தைக் கட்டாயப்படுத்தி வாங்கியதாக அவர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில் உண்மையில்லை. ஆகவே அவரது புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வேணுகோபால் ரெட்டி கூறியிருந்தார்.

இதற்கு சேஷாத்ரிகுமார் பதில் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது: நண்பர்கள், உறவினர்கள் அளித்த ஆலோசனையின்படி வேணுகோபால் ரெட்டியுடனான பிரச்னையை எங்களுக்குள் சுமுகமாக தீர்த்துக் கொள்ள முடிவு செய்தோம். இதற்காக 12.2.2012-ல் எங்களுக்குள் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது.

அதன்படி, வேணுகோபால் ரெட்டி எங்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடியே 75 லட்சத்தை அளித்துள்ளார். ஆகவே மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால் ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிராக காவல் துறையில் நான் அளித்த புகாரைத் திரும்பப் பெற விரும்புகிறேன் என்று அதில் சேஷாத்ரி கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.மதிவாணன், மனுதாரர், எதிர் மனுதாரர்கள் ஆகியோர் இடையேயான பிரச்னையை அவர்களே சுமுகமாகத் தீர்த்துக் கொண்டுவிட்டதால், 30.11.2011-ல் போலீஸார் தொடர்ந்த வழக்கில் மேல் விசாரணை தேவையில்லை. ஆகவே, போலீஸார் தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+