அரியலூர் அருகே பெண் சிசு உயிரோடு புதைக்கப்பட்டதா?- தாயிடம் போலீஸ் விசாரணை
அரியலூர்: பிறந்த சில மணிநேரத்திலேயே பெண் சிசு புதைக்கப்பட்ட விவகாரத்தில் தாய் மற்றும் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த மலத்தான்குளத்தைச் சேர்ந்தவர் வள்ளி. இவரது கணவர் கணேசன் 4 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
இந்நிலையில் வள்ளிக்கு நேற்று அதிகாலை பெண்குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி வீட்டுக்கு அருகிலேயே குழிதோண்டி புதைத்துள்ளார் வள்ளி.
இது கிராம மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி சிவனேசனிடமும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கணவர் இறந்துவிட்ட நிலையில் கள்ளத் தொடர்பின் மூலம் குழந்தை பிறந்ததால் உயிரோடு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சிவனேசன், போலீஸில் புகார் கூறினார்.
இதையடுத்து வீட்டுக்கு அருகே புதைக்கப்பட்ட சிசுவின் உடலை போலீஸார் தோண்டி எடுத்து திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதன் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்..
குழந்தையை உயிரோடு புதைத்தனரா? அல்லது உண்மையிலேயே குழந்தை இறந்தே பிறந்ததா? என்பது பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியவரும்.
மேலும் இது தொடர்பாக குழந்தையின் தாய் வள்ளி மற்றும் அவர்களது உறவினர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications