ஊட்டி, திருவனந்தபுரம், கொல்கத்தா, புவனேஸ்வர், பாட்னா, குவாஹாட்டியையும் உலுக்கிய நிலநடுக்கம்
கொல்கத்தா: இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கொல்கத்தாவில் நிலநடுக்கம் உணரப்பட்டதையடுத்து அங்கு மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே அசே பகுதியில் இன்று மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலில் நிலத்துக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, திருவாரூர், மலைப்பிரதேசமான ஊட்டி, கேரளாவில் கொச்சி, திருவனந்தபுரம், பீகார் தலைநகர் பாட்னா, ஒரிசா தலைநகர் புவனேஸ்வர், கட்டாக், பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, குவாஹாட்டி ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த இடங்களில் உள்ள கட்டிடங்கள் ஆட்டம் கண்டதால் மக்கள் பீதியில் அலறியடித்துக் கொண்டு தெருக்களில் ஓடி வந்து நின்றனர்.
பல அலுவலகங்களில் பணிபுரிவோர் உடனே வெளியேற்றப்பட்டனர். நிலநடுக்கத்தை அடுத்து கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு சென்னையை சுனாமி தாக்கலாம் என்று கூறப்படுகின்றது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல நேரம் மின்வெட்டு ஏற்படுவது அனைவரும் அறிந்ததே. மின்வெட்டு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நிலஅதிர்வை உணர்ந்த மக்கள் அது குறித்து டிவியில் பார்த்து தகவல் தெரிந்துகொள்ள முடியாமல் தெரிந்தவர்களுக்கு போன் செய்து விவரம் கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடப்பது என்னவென்று அறிய முடியாமல் தவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications