செல்போனில் ஆபாசப் படங்கள்: கெட்டுப்போகும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்
நெல்லை: நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள செல்போன் கடைகளில் மாணவர்களின் செல்போன்களில் ஆபாசப் படங்கள் பதிவு செய்து கொடுக்கப்படுவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மாறி வரும் விஞ்ஞான யுகத்தில் ஆச்சரியப்படும் வகையில் பயன்பட்டு வருவது செல்போன். ஆரம்பத்தில் வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த செல்போன்கள் தற்போது தெருக்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் என அனைவரின் கையிலும் தவழ்கிறது. இதனால் நகரங்களில் செல்போன் கடைகள்மற்றும் பழுது பார்க்கும் சென்டர்கள் அதிகளவில் முளைத்துள்ளன.
அந்த கடைகளில் பழுது நீக்குவது, ரீசார்ஜ் செய்வது, பக்தி மற்றும் சினிமாப் படங்கள், பாடல்களை மெமரி கார்டில் பதிவு செய்து கொடுப்பது, புதிய செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை போன்றவை நடைபெற்று வருகி்ன்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு பிடித்த சினிமா படங்களை செல்போன் மெமரி கார்டில் பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். ஆனால் இன்றைக்கு இந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது.
அதாவது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செல்போன் கடைகளுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது மெமரி கார்டில் சினிமா பாடல்கள் மட்டுமின்றி ஆபாசப் படங்களை பதிவு செய்து வாங்கி அதனை வகுப்பில் பயிலும் பிற மாணவர்களுக்கும் போட்டு காண்பித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை பார்க்கும் பிற மாணவர்களும் தங்களது செல்போன் மெமரி கார்டில் ஆபாசப் படங்களை பதிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை தடுக்க கடும் நடவடிக்கை தேவை என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications