பெங்களூரில் அபார்ட்மென்ட் மாடியில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்(ஹெச்ஏஎல்) உள்ளது. அங்கு இலகு ரக போர் விமானம், பயிற்சி விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று மாலை ஸ்வீசர்- 300சி ஹெலிகாப்டரில் ஓய்வு பெற்ற அதிகாரி ரோஜ் அசே, பயிற்சி விமானிகள் திக்விஜய் சிங் உள்பட 3 பேர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து பயிற்சி விமானி ஹெலிகாப்டரை பையப்பனஹள்ளியில் உள்ள மைத்ரி அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் அவசரமாக தரையிறக்கினார். இதில் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் காயமின்றி தப்பினர். இருப்பினும் அவர்கள் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது குறித்து விசாரணை நடத்துமாறு விமான சேவைகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. ஹெலிகாப்டர் இறங்கியபோது ஏற்பட்ட அதிர்வை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் நிலநடுக்கம் என்று நினைத்து பீதியடைந்தனர்.
தற்போது அங்கிருந்து ஹெலிகாப்டரை அகற்றுவது தான் பெரிய வேலையாக உள்ளது. ஹெலிகாப்டரை பாகம், பாகமாகப் பிரித்து எடுத்துச் செலக்கூடும் என்று கூறப்படுகிறது.