ரூ. 2 கோடி நிலத்தை அமுக்கினாரா எ.வ.வேலு?- போலீஸில் புகார்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே உள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 6 பேர் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையை அடுத்த ஆணாய்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.முருகன் (39). அவர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
ஆணாய்பிறந்தான் கிராமத்தில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான நிலத்தை அவரது வாரிசுதாரரிடம் நானும் எனது தம்பி சிவக்குமாரும் 27.06.2006 அன்று கிரையம் பெற்றோம். அதுமுதல் அந்த கிரைய சொத்தை நாங்கள் அனுபவித்து வருகிறோம். அந்த சொத்தை கிரையம் வாங்குவதற்கு முன் அந்த நிலத்தை குத்தகைக்கு பயிர் வைத்திருந்த குமார் என்பவர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு துணையுடன் சுப்பிரமணி, குமாருக்கு இரு உயில்களை எழுதிவைத்ததாக போலி ஆவணங்கள் தயார் செய்ததோடு குமாரின் மனைவி டில்லி பெயருக்கு மற்றொரு போலியாக தானசெட்டில்மெண்ட் ஆவணம் தயார் செய்து அதை எ.வ.வேலுக்கு விற்றுவிட்டனர்.
இந்த சொத்தை எ.வ.வேலு தன் பெயரில் கிரையம் செய்யாமல் தனது பினாமியான சண்முகம் பெயரில் 26.09.2007 அன்று கிரைய ஆவணம் தயார் செய்து பெற்றுக் கொண்டார். இந்த சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 2 கோடி ஆகும்.
இதையறிந்த நானும் எனது தம்பி சிவக்குமாரும் தாசில்தாரிடம் ஆட்சேபனை மனு கொடுத்தோம். உடனே எ.வ.வேலுவின் மற்றொரு பினாமியும் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவருமான நாகசங்கர் பெயரிலும், அவரது தம்பியும் வழக்கறிஞருமான நாககுமார் பெயிரிலும் 03.03.2010 அன்று போலி கிரைய ஆவணம் தயார் செய்து சொத்தை அபகரித்துவிட்டனர். இதை தட்டிக் கேட்ட எங்களுக்கு அவர்கள் கொலைமிரட்டல் விடுத்தனர்.
எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் சொத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவி்த்துள்ளார்.
இதனையடுத்து இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications