வீரம் பேசிவிட்டு ராஜ்தாக்கரேக்கு தூது அனுப்பி சரணடைந்த நிதிஷ்: லாலு பிரசாத்
லக்னோ: பீகார் தினத்தை மஹாராஷ்டிராவில் கொண்டாடுவது தொடர்பான விவகாரத்தில் ராஜ்தாக்கரே முன்பு நிதிஷ்குமார் மண்டிபோட்டுவிட்டதாக ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சாடியுள்ளார்.
பீகார் மாநிலம் உருவான நாளான ஏப்ரல் 15-ந் தேதி பீகார் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மும்பை வாழ் பீகாரிகள் ஏற்பாடு செய்த இருந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பீகார் மாநில தினத்தை மஹராஷ்டிராவில் கொண்டாட அனுமதிக்க முடியாது என்று மண்ணின் மைந்தர்கள் கோரிக்கையைப் பேசும் மஹராராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் ராஜ்தாக்கரே எச்சரித்திருந்தார்.
"மும்பை இந்தியாவில் தான் இருக்கிறது.. அங்கு போவதற்கு எல்லாம் விசா தேவையில்லை.. நான் போவேன்..எனன் நடக்குதுன்னு பார்க்கலாம்" என்று வீரவசனமும் பேசியிருந்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
இந்த விவகாரத்தில் நிதிஷ்குமாருக்கு பரமவைரியான லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளமும் கூட முழு ஆதரவளித்திருந்தது.
இந்நிலையில் திடீரென ராஜ்தாக்கரேவுக்கு திவேஷ் சந்திரா தாக்கூரை தூதராக நிதிஷ்குமார் அனுப்பி வைத்தார். பீகார் தினம் என்பது முழுமையாக ஒரு கலாச்சார நிகழ்ச்சி... அரசியல் நிகழ்ச்சி அல்ல.. இடையூறு செய்ய வேண்டாம் என்று சமாதானம் பேச ராஜ்தாக்கரேயும் அமைதியாகவிட்டார்.
இதையடுத்து மும்பையில் "வெற்றிகரமாக" பீகார் தினத்தை கொண்டாடிய பெருமையோடு லக்னோ சென்றடைந்தார் நிதிஷ்குமார்.
ஆனால் லக்னோவில் வீரம்பேசிவிட்டு மும்பையில் ராஜ்தாக்கரேயை சமாதானப்படுத்திய நடவடிக்கைக்கு லாலு பிரசாத் யாதவ் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜ்தாக்கரேயிடம் மண்டியிட்டது பீகார் மாநில மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்திவிட்டது என்றும் அவர் சாடியுள்ளார்.