உலகமே பாலஸ்தீனத்திற்காக வருந்துகிறது-ஆனால், அந்த நாட்டு அதிபரோ இலங்கையில்!
பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ், தனது 2 நாள் இலங்கை பயணத்தை இன்று தொடங்கினார். பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிக்குமாறு இலங்கையை கேட்டுக் கொள்வதற்காக அவர் வந்துள்ளார். நாளை அவர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசுகிறார். இலங்கையுடன் இரண்டு ஒப்பந்தங்களையும் பாலஸ்தீனம் செய்து கொள்ளவுள்ளது.
இஸ்ரேலின் இனவெறியிலிருந்தும், துவேஷத்திலிருந்தும் இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் ஒரு பரிதாப தேசம் பாலஸ்தீனம். அதேபோலத்தான் சிங்களத்தின் இனவெறியிலிருந்தும், துவேஷத்திலிருந்தும் மீள முடியாமல் தவிக்கும் பிரதேசம் ஈழம். பாலஸ்தீனர்களும், தமிழர்களும் இஸ்ரேல் மற்றும் இலங்கையின் கையில் சிக்கி பட்ட துயரங்களும், அடைந்த இழப்புகளும் சொல்லில் வடிக்க முடியாதது.
இன்னும் சொல்லப் போனால் பாலஸ்தீனியர்களின் கஷ்டமும், ஈழத் தமிழர்கள் வடித்த ரத்தமும் ஒன்றுதான் என்பார்கள். இப்படிப்பட்ட நிலையில் இப்போதுதான் ஒரு இன அழிப்பை நடத்தி முடித்துள்ள இலங்கைக்கு பாலஸ்தீன அதிபர் வந்துள்ளது பலரையும் விழி விரியச் செய்துள்ளது.