கூலி உயர்வு கோரி நெல்லையில் 5 லட்சம் பீடித் தொழிலாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்

பீடித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பாக 12-10-2010ல் முத்தரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது தொடர்பாக இறுதி அரசாணை வெளியிடாததால் கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த பீடி நிறுவனங்கள் மறுத்துவிட்டன. இதனால் இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை.
முத்தரப்பு ஒப்பந்தம் தொடர்பாக இறுதி அரசாணை வெளியிடக் கோரியும், ஒப்பந்தப்படி 1,000 பீடி சுற்றுக்கு ரூ.121.75 கூலி வழங்க வலியுறுத்தியும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடப் போவதாக பீடித் தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் சுந்தர்ராஜன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சமூக தீர்வு ஏற்படவில்லை. அரசாணை வெளியிட்டால் தான் கூலி உயர்வு அமல்படுத்த முடியும் என்று பீடி நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதனால் திட்டமிட்டப்படி நேற்று வேலை நிறுத்தம் தொடங்கியது.
இது குறித்து தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ராஜாங்கம் கூறுகையில்,
முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டு 2 ஆண்டு ஆகியும் கூலி உயர்வு வழங்கப்படவில்லை. முழுக்க முழுக்க இதற்கு அரசு தான் காரணம். அரசாணை வெளியிடும் வரை போராட்டம் தொடரும். நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், பேட்டை, பாளை, தச்சநல்லூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம், செங்கோட்டை, சேர்ந்தமரம், களக்காடு, ஏர்வாடி, முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் 5 லட்சம் பீடி தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் யாரும் பீடி சுற்ற மாட்டார்கள்.
இலை, தூள் வாங்குவதற்கு கம்பெனிகளுக்கு செல்ல மாட்டார்கள். மீண்டும் இன்று (18ம் தேதி) பேச்சுவார்த்தை நடக்கிறது. கூலி உயர்வு தொடர்பான உத்தரவாதம் அளித்தால் போராட்டம் வாபஸ் பெறப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications