மீன்பிடிக்க தடை எதிரொலி-நெல்லையில் மீன் விலை கடும் உயர்வு
நெல்லை: கடலில் மீன்பிடிக்க விசைப்படகுகளுக்கு 45 நாட்கள் விதிக்கப்பட்டதையடுத்து நெல்லையில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சீலா மீன் அதிகபட்சமாக கிலோ 700 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மீன் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மீன்களின் இனபெருக்கம் மற்றும் கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தடைக்காலம் கடந்த 15ம் தேதி துவங்கியது. இதனால் மீன்வரத்து கடந்த இரண்டு நாட்களாக குறைந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு வரும் மீன் வகைகள் கணிசமாக குறைந்துள்ளன. இதனால் ஆழ்கடலில் கிடைக்கும் சில வகை மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ருசிக்கும் சீலா மீன் வகை கடந்த வாரம் வரை கிலோ ரூ.500க்கு விற்பனையானது. தற்போது அவை ரூ.700க்கு விற்கப்படுகிறது. இதனால் இந்த மீன் விலையை கேட்பவர்கள் அதற்கு பதில் சற்று குறைந்த விலையில் விற்கும் மீன்களை வாங்கிச் செல்கின்றனர். துதிப்பு வகை மீன் கிலோ ரூ.300ல் இருந்து ரூ.400க உயர்ந்துள்ளது. இதேபோல் அனைத்து வகை மீன்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு மீன்பிடி தடை காலம வரை தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications