டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலையை உயர்த்த மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி கோரிக்கை

இது குறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பா ராவ் கூறுகையில், நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை (நாட்டுக்குள் வரும் அன்னியச் செலாவணிக்கும், வெளியேறும் அன்னியச் செலாவணிக்கும் உள்ள வித்தியாசம்) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வுகள் அவசியம்.
டீசல், கேஸ், மண்ணெண்ணெயின் விலைகளை அரசே தீர்மானிக்கிறது. இவற்றிற்கு அளிக்கப்படும் மானியத்தால் பட்ஜெட் செலவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 111 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, ஏப்ரல் மத்தியில் 120 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதனால் எண்ணெய் பொருள்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள மானியத் தொகை நிச்சயம் அதிகரிக்கும்.
அரசு அளித்து வரும் மானியங்களால் தான் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது என்றார்.
நாட்டின் 80 சதவீத பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி மூலமாகவே நிறைவு செய்து வருகிறது இந்தியா. 2012-13 நிதியாண்டில் பெட்ரோலியப் பொருள்களுக்கு ரூ.40,000 கோடியை மானியமாக அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications