கூடங்குளம் வந்த 10 ரஷ்ய விஞ்ஞானிகள்: இந்திய விஞ்ஞானிகளுடன் ஆலோசனை
நெல்லை: கூடங்குளத்திற்கு இன்று மேலும் 10 ரஷ்ய விஞ்ஞானிகள் வந்துள்ளனர். அவர்கள் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகளில் விரைவாக மின் உற்பத்தியைத் துவங்குவது குறித்து இந்திய விஞ்ஞானிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் 8 மாதங்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணிகளை தொடங்க ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அணு உலைகள் 1 மற்றும் 2க்கான பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது.
இதை எதிர்த்து கூடங்குளம், இடிந்தகரை, கூத்தக்குழி ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடத்திய போராட்டக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேச துரோக குற்றச்சாட்டுகள் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை வாபஸ் பெறக்கோரி போராட்டக்குழுவினர் தற்போது இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகி்ன்றனர். அடுத்த கட்டமாக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவது குறித்து கிராம மக்களிடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே ரஷ்ய அணு சக்தி ஏற்றுமதி கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி லினாரி யன்சோ தலைமையில் 10 விஞ்ஞானிகள் இன்று கூடங்குளம் வந்துள்ளனர். அவர்கள் முதலாவது அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி தொடங்குவது குறித்து இந்திய அணு சக்தி கழக விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தினர். ரஷ்ய அணு சக்தி ஏற்றுமதி கழகத்திடமிருந்து எதிர்பார்க்கப்படும் உதவிகள், இந்திய அணு சக்தி கழக விஞ்ஞானிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணு சக்தி கழக தலைவர் ஜெயின் இன்று மாலை கூடங்குளம் வருகிறார். அவரும் ரஷ்ய விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். எப்படியும் இன்னும் 2 மாதத்தில் மின் உற்பத்தியைத் துவங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications