மேலும் 30 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி!
சென்னை: சென்னை மாநகராட்சியின் மேலும் 30 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித் திட்டம் அமலாக்கப்படவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சிக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்தது. அப்போது நடந்த விவாத விவரம்,
சுபாஷ் சந்திரபோஸ் (திமுக): சென்னையில் பரவி வரும் பன்றிக் காய்ச்சலை தடுக்க மாநகராட்சி என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?
மேயர்: பன்றிக் காய்ச்சல் பரவும் முறை, இதற்கான அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 28 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியது கண்பிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் குணம் அடைந்து வருகிறார்கள். பொதுமக்கள் மஞ்சள், மிளகு, சோற்று கற்றாலை, பூண்டு, சிறிய வெங்காயம் ஆகிய ஐந்தையும் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் எந்த நோயும் அண்டாது.
ஜானகிராமன் (அதிமுக): லாரியில் குப்பைகளை மூடாமல் எடுத்து செல்வதால் ரோட்டில் செல்லும் பொதுமக்கள் மீது விழுகிறது.
மேயர்: அவ்வாறு செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சுகுமார்பாபு (அதிமுக): 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியை கட்டாயமாக கொண்டு வரவேண்டும்.
மேயர்: இது முதல்வரின் கவனத்தில் உள்ளது. பரிசீலித்து முடிவு எடுப்பார்.
தமிழ்ச்செல்வன் (காங்கிரஸ்): ஆங்கில வழி கல்வியுடன் இந்தியும் கற்று தர வேண்டும்.
மேயர்: அரசின் கொள்கை முடிவுகள் பற்றி இங்கு பேச வேண்டாம்.
இதையடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஏற்கனவே 69 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உயர் கல்விக்கு வசதியாக இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி இந்த ஆண்டு கூடுதலாக 30 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications