'இடைத்தேர்தல்' புதுக்கோட்டைக்கு புது நிர்வாகிகள்: ஜெ. அறிவிப்பு
புதுக்கோட்டை : இடைத் தேர்தல் நடைபெற உள்ள புதுக்கோட்டை தொகுதி அ.தி.மு.கவுக்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சிப் பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சசிகலா உள்ளிட்டோர் மீது தொடர்பு வைத்திருந்த பலரை தமிழ்நாடு முழுவதும் அதிமுகவிலிருந்து ஜெயலலிதா நீக்கி வைத்திருந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் சில நிர்வாகிகளை அவர் நீக்கியிருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தல் வருவதால் நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டஅ.தி.மு.க. மகளிர் அணி செயலாளராக நகராட்சி கவுன்சிலர் சுபத்ரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை ஒன்றிய செயலாளராக வே.மு.குமார், அவைத் தலைவராக அண்ணாதுரை ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கறம்பக்குடி ஒன்றியச் செயலாளராக சண்முகம், ஜெயலிலதா பேரவைச் செயலாளராக கலைமான், இளைஞரணி செயலாளராக குமார், மணல்மேல்குடி ஒன்றிய செயலாளராக அலி அக்பர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட முதல்வர் ஜெயலலிதாவிடம் சுபத்ரா தேவி விருப்ப மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.