பன்றி காய்ச்சல் வந்தால் அரசு மருத்துவமனைக்கு அனுப்புங்க: அமைச்சர்
சென்னை: பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க இயலாவிட்டால் அவர்களை உடனே அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது பன்றிக்காய்ச்சல் தொடர்பாக திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூ.) சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் இதுவரை 77 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததாலும் தனியார் மருத்துவ மனைகளில் ஆரம்பத்தில் சிகிச்சை பெற்ற போது டாமி புளு மாத்திரை கொடுக்கப்படாததாலும் நோயின் தாக்கம் அதிகமாகி இறந்து விட்டார்கள். இதில் 60 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார்கள். தற்போது தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டில் உள்ளது.
தனியார் ஆஸ்பத்திரியில் டாமிபுளு மாத்திரைகள் பெரும்பாலும் கொடுக்கப் படுவதில்லை. இந்த நோய் கண்டறியப்பட்டவுடன் டாமிபுளு மாத்திரை கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இல்லையென்றால் வைரஸ் ரத்தத்தில் பரவி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். எனவே பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாவிட்டால் உடனே அந்த நோயாளிகளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் கூறினார்.












Click it and Unblock the Notifications