ஒரு மாத சிறை வைப்புக்குப் பின் கடத்தப்பட்ட பிஜேடி எம்.எல்.ஏவை விடுவித்த மாவோயிஸ்டுகள்
புவனேஸ்வர்: கடத்தப்பட்ட பிஜூ ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ ஜீனா ஹிகாகாவை ஒரு மாதம் கழித்து மாவோயிஸ்டுகள் இன்று விடுதலை செய்துள்ளனர். அவர்கள் தன்னை சித்ரவதை செய்யவில்லை என்று ஹிகாகா தெரிவித்துள்ளார்.
ஒரிசா மாநிலம் கோரப்புட்டில் வைத்து பிஜூ ஜனதாதள கட்சியைச் சேர்ந்த லக்மிபூர் எம்.எல்.ஏ ஜீனா ஹிகாகா கடந்த மாதம் 24ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க மாவோயிஸ்டுகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் விடுவிக்க வேண்டும் என்பது அதில் முக்கியமான ஒன்று. மாவோயிஸ்டுகளின் பல கோரிக்கைகளை அரசு ஏற்பதாக வாக்குறுதி அளித்தது.
இதையடுத்து நேற்று நாராயணபட்னா என்ற பகுதியில் மாவோயிஸ்ட்கள் மக்கள் நீதிமன்றம் என்ற முடிவெடுக்கும் கூட்டத்தை கூட்டினர். மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கூட்டத்தில் பழங்குடியின மக்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காணத் தவறியதற்கு ஹிகாகா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும் தான் விடுதலை செய்யப்பட்டவுடன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதுடன் பிஜூ ஜனதா தள கட்சியில் இருந்தும் விலகிவிடுதாக வாக்களித்துள்ளார். இதையடுத்து தான் அவர் இன்று காலை 10 மணிக்கு கோராபுட் பகுதியில் விடுவிக்கப்படுவார் என்று மாவோயிஸ்ட்டுகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி கோரப்புட் பகுதியில் உள்ள பலிபேட்டா கிரமாத்தில் வைத்து அவர் விடுவிக்கப்பட்டார். அவரது மனைவி கௌசல்யா ஹிகாகா மற்றும் வழக்கறிஞர் என்.ஆர். பட்நாயக் ஆகியோரிடம் ஹிகாகா ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த ஒரு மாதமாக மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்தபோதிலும் அவர்கள் தன்னை சித்ரவதை செய்யவில்லை என்று ஹிகாகா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications