தனி ஈழம் அமைய மத்திய அரசு உதவ வேண்டும்: நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை
டெல்லி: இலங்கையில் தனி ஈழம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
நேற்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு திமுக எம்.பி. டி. ஆர். பாலு பேசியதாவது,
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்னும் முள்வேலி முகாம்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான ராணுவத்தின் கொடுஞ்செயல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை செயல்படுத்த அந்நாட்டு அரசு முன்வரவில்லை.
மேலும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கும் 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இலங்கை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழத்திற்கு குறைவாக எதை அளித்தாலும் ஏற்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ இந்த விவகாரத்தை ஐ.நா. உள்ளி்ட்ட சர்வதேச அமைப்புகள் வரை இந்தியா கொண்டு சென்று தனி ஈழம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்று திரும்பிய பிறகும் இன்னும் மத்திய அரசு எந்த அறிக்கையும் வெளியிடாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்றார்.
அவரையடுத்து திமுக எம்.பி. தாமரைச்செல்வன் பேசியதாவது,
இலங்கைக்கு இந்திய அரசு வழங்கி வரும் நிவாரண உதவிகள் உண்மையான பயனாளிகளுக்குத் தான் சென்றடைகிறதா என்பதை உறுதிபடுத்த மத்திய அரசு செயல்திட்டம் வகுக்க வேண்டும். இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக இந்திய அரசின் நிதியுதவியில் கட்டி கொடுக்கப்படும் வீடுகளில் சிங்கள மக்கள் தங்கவைக்கப்படுகிறார்கள்.
எனவே, ஈழத்தில் தமிழர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவி அவர்களை சென்றடைவதை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மேற்பார்வையிட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications