நெல்லையில் வாடிக்கையாளருக்கு கேஸ் வழங்காத இன்டேன் வினியோகஸ்தர் கைது
நெல்லை: புளியங்குடி அருகே வாடிக்கையாளருக்கு கேஸ் வழங்காத இன்டேன் கேஸ் வினியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்த திருமலைசாமி மனைவி கமலிகுமாரி. அவர் புளியங்குடியில் இன்டேன் கேஸ் வினியோகஸ்தரிடம் வாடிக்கையாளராக உள்ளார்.
இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் தனக்கு முறையாக சிலிண்டர் வழங்கவில்லை என கூறி நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரன் இது குறித்து புளியங்குடி இன்டேன் கேஸ் வினியோகஸ்தர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
ஆனால் குறிப்பிட்ட தேதியில் அந்த வினியோகஸ்தர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வினியோகஸ்தரை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை அமல்படுத்துமாறு புளியங்குடி போலீசாருக்கு எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று புளியங்குடி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் தங்கதுரை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜு மற்றும் போலீசார் இன்டேன் கேஸ் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த வினியோகஸ்தர் சண்முகசுந்தரியை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நேற்று நெல்லையிலுள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications