ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் அரசியல் தீர்வு காண வேண்டும்- சிபிஎம் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

G Ramakrishnan
சென்னை: தனி ஈழம் வேண்டும் என்று இலங்கையில் எந்தத் தமிழரும் கூறவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும அதைக் கூறவில்லை. பிற தமிழ்க் கட்சிகளும் அதை வலியுறுத்தவில்லை. மார்கிச்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமுதாயத்தினரும் சம அதிகாரத்துடன் வாழ தீர்வு காணப்பட வேண்டும் என்பதே கொள்கையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் இடம் பெற்றிருந்தார். இலங்கை சென்ற இந்தக் குழு ஆளும் கட்சியின் பிரதிநிதிகளை மட்டுமின்றி பல்வேறு தமிழக அமைப்புகள் குழுக்களின் பிரதிநிதிகளையும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து உரையாடியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால், குறிப்பாக இறுதிக்கட்ட போரின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு, முழுநிவாரணம், முகாம்களில் தங்கியுள்ளவர்களை மீள்குடியமர்த்துதல், தமிழர்கள் பகுதியிலிருந்து இராணுவத்தை முற்றாக விலக்கி கொள்வது ஆகியவை தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் உடனடி கோரிக்கையாக உள்ளது.

மேலும், இலங்கை அரசு அமைத்த கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

சுற்றுப் பயணம் முடித்து, சென்னையில் பேட்டியளித்த டி.கே.ரங்கராஜன் இலங்கைத் தமிழர் அமைப்புகளும், பொதுமக்களும் தனி ஈழம் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை. மாறாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவல் அடிப்படையில் அரசியல் தீர்வையே வலியுறுத்துகின்றன என்று குறிப்பிட்டார்.

திமுக தலைவர் கருணாநிதி முரசொலி ஏட்டில் எழுதியுள்ள கடிதத்தில் தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் வலியுறுத்தவில்லை என்று கூறியுள்ளதற்காக டி.கே.ரங்கராஜனை விமர்சித்துள்ளார். இலங்கையில் பல்வேறு தரப்பினரும் கூறியுள்ள கருத்தைத்தான் டி.கே.ரங்கராஜன் எடுத்துரைத்துள்ளார்.

தனி ஈழத்திற்குக் குறைவான எதற்கும் இலங்கைத் தமிழர்கள் எதற்கும் சம்மதிக்க மாட்டார்கள் என்ற கருணாநிதியின் கருத்து குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளேயே தீர்வு காண்பதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கை சென்ற இந்திய எம்.பிக்கள் குழுவிடமும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கருத்தரங்கில் உரையாற்றுகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்பதையே வலியுறுத்தினார். இப்போதும் கூட அவர் தனி ஈழத்திற்குக் குறைவான எதையும் ஏற்கமாட்டோம் என்று கூறவில்லை. மாறாக, தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றுதான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர் தேசிய கூட்டமைப்புதான் அதிகாரப்பரவல் குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்டகாலம் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைத்திட வேண்டும். அவர்கள் அனைத்து நிலைகளிலும் சம உரிமையுடன், இலங்கையில் வாழ வேண்டும். நிலம் உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழர் பகுதியிலிருந்து ராணுவம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைப்பதும் அதற்காக இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதும் இந்திய அரசு உரிய முறையில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்துவதும் தான் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவுவதாக அமையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

எந்த ஒரு பிரச்சனையிலும் சம்பந்தப்பட்ட மக்கள் மற்றும் பிரதிநிதிகளின் கருத்தோட்டம் என்ன என்பதே முதன்மையானது. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி, அர்த்தபூர்வமான அதிகாரப்பரவல் என்பதையே முன்பின் முரணின்றி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி 1991-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைப் பிரச்னையில் முரணற்ற வகையில் நிலையெடுத்து வந்துள்ளதை சுட்டிக்காட்டி, விடுதலைப் புலிகளின் தனிஈழம் என்ற கோரிக்கையில் உள்ள சிரமங்களை ஒப்புக்கொண்டு உரையாற்றினார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இலங்கை தமிழர்கள் முன் இப்போதுள்ள முக்கிய பிரச்னை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நிவாரணம், மறுவாழ்வு, அதிகாரப்பரவல் என்பதை ஒன்றுபட்ட முறையில் அழுத்தமாக முன்வைப்பதே இலங்கைத்தமிழ் மக்களுக்கு உதவுவதாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+