உலக அமைதிக்காக காளை மாட்டுக்கு திருமணம் செய்து வைத்த காங். எம்.எல்.ஏ.
திருப்பதி: உலக அமைதிக்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாகேஸ்வர ராவ் காளை மாட்டுக்கும், பசுவுக்கும் திருப்பதியில் திருமணம் செய்து வைத்தார்.
மேற்கு கோதாவரி மாவட்டம் தனுக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கருமுரி வெங்கட நாகேஸ்வர ராவ். அவர் தனது ஆதரவாளர்கள் 70 பேருடன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷனசாலா என்னும் மாட்டுப் பண்ணைக்கு சென்றார். அங்கு அய்யர் ஹோமம் வளர்த்து, வேத மந்திரம் ஓதி, முறைப்படி தாலி எடுத்துக் கொடுக்க மணமகன் காளை சார்பில் மணமகள் பசு கழுத்தில் தாலி கட்டப்பட்டது.
உலக கால்நடை தினமான கடந்த சனிக்கிழமை இந்த வித்தியாசமான திருமணம் நடந்தது. உலக அமைதிக்காக அவர் இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். மணமக்கள் நெற்றியில் தனது கையால் குங்குமம் வைத்துவிட்ட எம்.எல்.ஏ. சடங்குகள் முடிந்த பிறகு புதுமணத் தம்பதிக்கு மாட்டுத்தீவனம் மற்றும் வாழைப்பழம் கொடுத்தார்.
இந்த திருமண விழாவில் பண்ணையின் தலைவர் கே. ஹரிநாத் ரெட்டி உள்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த பிறகு அந்த மாடுகள் திருப்பதி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டது. திருப்பதியில் இதுபோன்ற வித்தியாசமான திருமணம் நடந்தது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications